தமிழத்தைப் புறக்கணிக்கும் மத்திய ரயில்வே துறை - மதிமுக தாக்கு
விருதுநகர்: தமிழகத்தின் நீண்ட கால ரயில்வே துறை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருதுநகர் மதிமுக மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக போடப்பட்ட தீர்மானம்...
தென்தமிழ்நாட்டின் கல்வி, சமூக, பொருளாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் உயரிய நோக்கத்தோடு கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் சிவகாசி தொகுதியின் நாடளுமன்ற உறுப்பினராக இருந்த போது விருதுநகர் முதல் செங்கோட்டை வழியாக கொல்லம்; தென்காசி முதல் திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் வரை 247 கிலோ மீட்டர் தூர அகல இரயில் பாதை திட்டத்தை பெற்றுத்தந்து பெரும் சாதனை படைத்தார்கள்.
இன்றைய மதிப்பீட்டில் சுமார் 2 ஆயிரம் கோடியிலான இத்திட்டத்தின் செங்கோட்டை முதல் கொல்லம் வரை 200 கோடி ரூபாய் மதிப்பிலான அகல இரயில்ப்பாதை வேலைகள் முற்றுப்பெறாமல் 13 ஆண்டுகாலமாக ஆமை வேகத்தில் நடந்துவருகிறது என்பதற்கு உதாரணமாக நடப்பு ஆண்டில் ரூபாய் 20 கோடி மட்டுமே இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டிப்பதோடு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்து இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் எனவும்,
செங்கோட்டையில் இருந்து சிவகாசி, விருதுநகர் வழியாக ஈரோடு வரை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தினசரி இரயில் இன்னும் இயக்கப்படவில்லை என்பதோடு இந்த இரயிலை கோவை வரை இயக்கிடவும், இவ்வழித்தடத்தில் பெங்களுர் வரை தினசரி இரயிலையும், மும்பை வரை வாராந்திர இரயிலையும், இயக்கிட வேண்டும் எனவும், மிக முக்கிய ஆன்மீகத்தலமாக விளங்கும் திருப்பரங்குன்றத்தில் சென்னை செல்லும் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
தென்மாவட்டங்களில் கல்வி, தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு விருதுநகர் சந்திப்பு இரயில் நிலையத்தை இரயில்கள் வந்து புறப்படும் வகையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளுடன் விரிவாக்கம் செய்திட வேண்டும் எனவும்,
கழகப் பொதுச்செயலாளர் அவர்களின் தொடர் முயற்சியின் விளைவாக கொண்டு வரப்பட்ட விருதுநகர் முதல் அருப்புக்கோட்டை வழியாக மானமதுரை வரை செல்லும் 67 கிலோ மீட்டர் தூர அகல இரயில் பாதையில் அமைந்துள்ள பகுதி மக்கள் பயன் பாட்டிற்கு விருதுநகர் சந்திப்பில் இருந்து சென்னை, பெங்களூர் சென்று வரும் பயணிகளுக்கான இணைப்பு இரயில்களை இயக்கிட வேண்டும் எனவும்,
சென்னை முதல் கன்னியாகுமரி வரை ; மணியாச்சி முதல் தூத்துக்குடி வரை விரைவான போக்குவரத்துக்காக இரட்டை இரயில் பாதைத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் எனவும்,
விருதுநகரில் இருந்து சென்னை வரை மின்மயமாக்கப்பட்டுள்ளதால், விருதுநகரில் இருந்தே மின்சாரசக்தியின் மூலம் இரயில்களை இயக்கிட வேண்டும் எனவும், விருதுநகர் முதல் குமரி வரை முழுமையாக மின்பாதை விரைந்து அமைத்திட வேண்டும் எனவும்,
சிவகாசி - திருத்தங்கல் சாலை; சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலை ; விருதுநகர் இராமமூர்த்தி சாலை ஆகியவற்றில் நீண்டகாலமாக பொதுமக்கள் கோரிவருகின்ற இரயில்வே மேம்பாலங்களை விரைந்து அமைத்திட வேண்டும் எனவும்,
விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னை - குமரி - சென்னை - செங்கோட்டை; சென்னை - தூத்துக்குடி வழித்தடத்தில் கூடுதலாக சரக்கு இரயில்களை இயக்கிட முன் வர வேண்டும் எனவும் இந்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
மதுரையில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்குக!
தென்மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளிலும், பல்வேறு அரபுநாடுகளிலும் வேலை செய்து வருகின்றார்கள் என்பதோடு இந்நாடுகளுக்கு வணிகத் தொடர்பும் உள்ளதை கருத்தில் கொண்டு மதுரை விமானநிலையத்தில் இருந்து அரபுநாடுகளுக்கும், கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் சர்வதேச விமானச்சேவை அளித்திட வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications