தே.ஜ கூ கூட்டணி வெற்றி பெற மதிமுக அர்ப்பணித்துப் பாடுபடும்: வைகோ
சென்னை: காங்கிரசை ஆதரிக்கின்ற ஆட்சியும் வரக்கூடாது. அவர்களுடன் கரம் கோர்க்கின்றவர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், நாங்கள் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் அவர்களின் மகள் ஜீ.மணிமேகலை-பிரகதீஸ்வரன் திருமண வரவேற்பு திங்கட்கிழமை, சென்னை-எழும்பூரில் உள்ள சிராஜ் மகாலில் நடைபெற்றது. அப்போது மணமக்களை வாழ்த்தி வைகோ பேசியதாவது:
சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கவே அண்ணா அவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களோடு கரம் கோர்த்து வந்தார். அது ஒரு வசந்த காலம்.

காங்கிரசை வீழ்த்துவதற்காக அண்ணா அவர்கள் கூட்டணி அமைத்தார்கள். தமிழ்நாட்டுக்கும் தமிழக வாழ்வாதரங்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் வஞ்சகமும் கேடும் செய்து, சரித்திரத்தில் இல்லாத ஊழல் புரிந்து வருகிற மக்கள் விரோத அரசாக இயங்குகின்ற காங்கிரஸ் தலைமை தாங்குகிற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை அகற்றுவது மட்டுமல்ல, காங்கிரஸ் டெல்லி அரச பீடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். காங்ரசின் தயவிலும் ஆட்சி வரக்கூடாது.
காங்கிரசை ஆதரிக்கின்ற ஆட்சியும் வரக்கூடாது. அவர்களுடன் கரம் கோர்க்கின்றவர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், நாங்கள் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.
நாங்கள் எங்கிருந்தாலும் சிறுபான்மை மக்களைப் பாதுகாப்போம். சமூக நீதி, மீனவர் பாதுகாப்பு, தமிழக வாழ்தாரங்களின் உரிமைகளை பாதுகாப்பது, ஈழ விடியலுக்காக இலங்கை அரசுக்கு காங்கிரஸ் அரசு செய்த உதவி என்கின்ற துரோகத்தை செய்யவே விடாமல் தடுப்பதற்கான அரணை அமைத்துவிட்டால், சுதந்திர தமிழ் ஈழம் உருவாவதற்கான களத்தை நாம் உருவாக்கிவிட முடியும்.
ஊழலற்ற அரசியலை வெற்றி பெற வைப்பதற்காகவே, இம்மியளவும் எதையும் சமரசம் செய்துகொள்ளாமல் எங்கள் பணிகளைத் தொடர்வோம்.

கட்டுப்பான இயக்கம் மறுமலர்ச்சி தி.மு.க.. அப்படித்தான் மறுமலச்சி தி.மு.க.வின் தொண்டர்களை நாங்கள் வார்ப்பித்திருக்கிறோம்.
மிசா வழக்கில் கைது செய்யப்பட்டு நான் சிறையில் இருந்தபோது, என் வீட்டிலிருந்து சிறைக்கு வந்து என்னைச் சந்தித்தார்கள். அப்போது அண்ணா நினைவு நாள் ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையே? நீங்கள்தானே திருநெல்வேலி மாவட்டத்தில் முதன் முதலாக கைது செய்யப்பட்டீர்கள்? என்று வருத்தப்பட்டார்கள். கலைஞர் அதை வேண்டுமென்று செய்திருக்க வாய்ப்பு இல்லை. ஏதோ தவறுதலாக அது விடுபட்டிருக்கிறது.
சிறையில் இருக்கும்போது வாரத்திற்கு 10 கடிதங்கள் எழுதலாம். 9 கடிதங்களை நான் கழகத்தினருக்கும், ஒரு கடிதம் வீட்டுக்கும் எழுதுவேன். கழக நிர்வாகிகளும் எனக்கு பதில் கடிதம் எழுதுவார்கள். அப்படி எழுதிய கடிதங்களை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன்.
வெற்றிக்காக பாடுபடுவோம்
நாங்கள் சில இலட்சியங்களுக்காக வாழ்கிறோம். அது எங்கள் மனதில் விதைக்கப்பட்ட இலட்சியம். ஊழலற்ற அரசியல், நேர்மையான அரசியல், தன்னலமற்ற அரசியல், சாதி மத உணர்வுகளுக்கு இடம்கொடுக்காத மனிதநேயமிக்க அரசியல் அதை வெற்றிபெறச் செய்வதற்கு நாங்கள் பாடுபடுவோம்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி தி.மு.க. தொகுதி உடன்பாடு முடிந்து தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுவையிலும் நாங்கள் இடம்பெறுகிற தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் அர்ப்பணித்துப் பாடுபடுவோம்.
மக்கள் தீர்ப்பு
காசு பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த முறை மக்கள் மனங்கள் மகத்தான தீர்ப்பு வழங்கும். இதன் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும்.
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து அனைத்துலக நீதிவிசாரணை நடைபெறவேண்டும் என்ற குரலை நாம் எழுப்பி வருகிறோம்.
சர்வதேச நீதிமன்றத்தில்
இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொடியவனை கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் விழைகிறோம். அதே நேரத்தில் சிங்களக் குடியேற்றங்கள் வெளியேற்றப்பட்டு, நிலப் பறிப்பு நிறுத்தப்பட்டு, சிறையில் அடைபட்டுள்ள புலிகள் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டு, ஈழத் தமிழர் தாயகத்தில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உலகத்தில் பல பொதுவாக்கெடுப்புகள் நடைபெற்றிருக்கின்றன.
பொதுவாக்கெடுப்பு
எந்த பொதுவாக்கெடுப்பிலும் அந்த குறிப்பிட்ட மண்ணைத் தவிர வேறு எங்கும் வாக்குப் பெட்டி வைக்கப்படவில்லை. ஆனால், உலகத்தில் பல நாடுகளுக்கு ஏதிலிகளாகச் சென்ற புலம்பெயர் ஈழத் தமிழ்வாழ் மக்களும் அந்த ஓட்டெடுப்பில் பங்கெடுக்க வேண்டுமெனில் அவர்கள் வன்னிக்கோ, மட்டக் களப்புக்கோ, யாழ்ப்பாணத்துக்கோ, வல்வெட்டித் துறைக்கோ, மன்னாருக்கோ அனைவரும் போய் வாக்களிக்க முடியாது.
அந்தந்த நாடுகளிலேயே அவர்களுக்கு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு, ஓட்டுப்போட வேண்டும் என்ற நிலையை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்ற கருத்தை உலக அரங்கத்தில் முதன் முதலாக முன் வைத்தது இந்த வைகோ மட்டும் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications