தோற்றாலும் தொடர்ந்து தமிழருக்காக போராடுவோம்- வைகோ
நெல்லை: தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மதிமுக தொடர்நது போராடும். லோக்சபா தேர்தலில் தோற்றதால் மதிமுக சோர்ந்து போய் விடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வைகோ மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சித் தொண்டர்களை சந்தித்து வருகிறார். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து அவர்கள் ஆய்வு நடத்தி வருகிறார்.
இதன் முதல்படியாக நெல்லையில் கள ஆய்வு சந்திப்பு மதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. இதில் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், மாவட்ட செயலாளர் சரவணன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நிஜாம், மாநில மாணவரணி அமைப்பாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
நெல்லை மாவட்டத்தில் மதிமுகவுக்கு 27 ஓன்றியங்கள், 7 நகரங்கள் உள்ளன. ஓன்றிய, நகர செயலாளர்களிடம் மினிட் புக்கை வாங்கி பார்த்து கட்சி பணிகள் குறித்து வைகோ கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில், அனைத்து பகுதிகளிலும் மதிமுக கொடி ஏற்ற வேண்டும். கடந்த தேர்தலில் அதி்முக பண பலத்தால் வென்றது. எனவே வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்பட வேண்டாம். தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக தொடர்ந்து போராட வேண்டும். இதன் மூலம் மக்கள் நம்மளை திரும்பி பார்ப்பார்கள். தோல்வியை கண்டு ஒருபோதும் துவண்டு போக வேண்டாம் என்றார் வைகோ.