ஓடும் ரயிலில் 2 வாலிபர்கள் தூக்குப் போட்டுத் தற்கொலை
சென்னை: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில், அடையாளம் தெரியாத பயணி வேட்டியில் தூக்குப் போட்டு சனிக்கிழமை இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு என்ற இடத்தில் கிராசிங்குக்காக நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் பயணம் செய்த ஒருவர் அந்தப் பெட்டியின் படிக்கட்டு கதவை திறந்துள்ளார். அப்போது வெளிப்புறக் கதவில் இளைஞர் ஒருவர் வேட்டியில் தூக்குப்போட்ட நிலையில் காலில் காயங்களுடன் தொங்கிக் கொண்டிருந்துள்ளார். இதனைக் கண்ட அந்தப் பயணி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார், தூக்கில் தொங்கிய இளைஞரை கீழே இறக்கி பார்த்தபோது, அவர் இறந்து விட்டது தெரியவந்தது. 35 வயது மதிக்கத்தக்க அவரது சட்டைப் பையில் விருத்தாசலத்தில் இருந்து திருச்சி செல்வதற்கான பயணச்சீட்டு இருந்தது.
எனவே அவர் விருத்தாசலத்தில் ஏறியிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல் உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலின் ஜன்னல் கம்பியில் இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரா ரயில் நிலையத்திற்கு அதிகாலை 4 மணிக்கு அந்த ரயில் வந்துள்ளது. அப்போது ஒரு பெட்டியின் ஜன்னலில் சடலம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மேற்கொண்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட நபருக்கு 30 வயதிருக்கலாம் என்றும், அவருடைய கையில் ரயில் டிக்கெட் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர். எனவே உயிரிழந்தவரின் பெயர், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினர்.
இருவேறு இடங்களில் அடையாளம் தெரியாத ஆண்கள் ரயில் பெட்டியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications