குமரி கடல் பகுதியில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு... 2 நாள்களுக்கு பலத்த மழை பெய்யும்
சென்னை: குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் மேலும் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதே பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒன்றும் உருவாகி இருப்பதால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், கடந்த சில நாள்களாக இலங்கை, வட தமிழகத்தை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்தது சனிக்கிழமை காலை, தமிழகத்தை ஒட்டிய இலங்கை, குமரிக் கடல் பகுதியில் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு நிலையாக நீடிக்கிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம். கடலோர மாவட்டங்கள், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்புண்டு.
சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். கடலோரப் பகுதியில் வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 55 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால், தென் கடலோர மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கிறோம்.
அதேபோல், வட கடலோர மீனவர்கள் மிகுந்த கவனத்துடன் கடலுக்குள் செல்ல வேண்டும். இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுப்பெற வாய்ப்பில்லை என்றார்.
இதனிடையே தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒன்று உருவாகி இருப்பதால் இதனால் அதிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.