காங்கிரஸ் ஆட்சியில் அனுமதி.. ஸ்டாலின் விளக்கம்..கடைசியில் ரத்து! மீத்தேன் திட்டம் கடந்து வந்த பாதை
ஒருவழியாக, மீத்தேன் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசின் அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்து வந்த பாதை இதுதான்.
சென்னை: பல்வேறு போராட்டங்களை கடந்துதான் மீத்தேன் திட்டம் இப்போது மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான பாதைகள் ரொம்ப கடினமானவை.
Great Eastern Energy Corporation Ltd (GEECL) என்ற அமைப்புதான் டெல்டா மாவட்டங்களில் நிலத்துக்கு அடியே துளையிட்டு மீத்தேன் எடுக்க அனுமதி பெற்றது.
2010, ஜூலை 29ல் நடைபெற்ற ஏலத்தில் இந்த நிறுவனம் லைசென்ஸ் பெற்றது. அப்போது மத்தியில் காங்கிரஸ் அரசும், மாநிலத்தில் திமுக அரசும் இருந்தன.

2011 ஜனவரி 1ம்தேதி, அப்போதைய தமிழக அரசு, 667 km2 பரப்பிலான நிலப்பரப்பில் மீத்தேன் எடுக்க 4 ஆண்டுகளுக்கான லைசென்ஸ் வழங்கியது. நாகப்பட்டினம், தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் இந்த பரப்பளவிற்குள் வந்தன.
2011, ஜனவரி 4ம் தேதி, தமிழக அரசு, மீத்தேன் எடுக்கும் நிறுவனத்தோடு, புரிந்துணர்வு ஒப்பந்தமும் போட்டுக்கொண்டது.
2011, டிசம்பர் 29ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு முகாமில், விவசாயிகள், இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து தங்கள் கோபத்தை பதிவு செய்தனர்.
2012, செப்டம்பர் 12ல், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம், இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கியது.
மீத்தேன் திட்டம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார் மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். ஊடகங்களும் இந்த விழிப்புணர்வு பயணத்தில் கை கோர்த்தன.
தமிழகத்தில் அதிமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், 2013, ஜூலை 17ல், அண்ணா பல்கலைக்கழகம், தமிழக விவசாய பல்கலைக்கழகம் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு பவுண்டேசனை சேர்ந்த, நிபுணர்கள் அடங்கிய குழுவை ஆய்வுக்காக அமைத்தது தமிழக அரசு.
ஆய்வின் அடிப்படையில், 2013, அக்டோபர் 8ல், மீத்தேன் திட்டத்திற்கு தடை போட்டது தமிழக அரசு.
2015, மார்ச் மாதம், திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், "தி.மு.க. ஆட்சியில், துணை முதல்வராக நான் இருந்தபோது, மீத்தேன் ஒப்பந்தம் போடப்பட்டது உண்மைதான். ஆனால், மீத்தேன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து தெரியாமல், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது" என விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில்தான், போராட்டங்கள் வலுத்ததை தொடர்ந்து, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (நவம்பர்-10) அளித்த பேட்டியில், மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications