சென்னை மெட்ரோ ரயில்- அக்டோபரில் 2 வழிப் போக்குவரத்து தொடக்கம்
சென்னை: சென்னை, கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை இரண்டு வழித்தடங்களிலும் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
அக்டோபர் மாதம் முதல் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையும் சென்ட்ரலில் இருந்து புனித தோமையர் மலை வரையும் இரண்டு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 24 கி.மீ. தூரம் சுரங்கப் பாதையிலும் 21 கி.மீ. மேம்பாலத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.

தற்போது 2 ஆவது வழித்தடத்திலும் கடந்த வாரம் முதல் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரி கூறும்போது "சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக உயர்த்தப்பட்ட பாதையில் கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை 6 கி.மீ. தூரத்துக்கு தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய கட்டுமான பணிகள் அனைத்தும் ஒரு சில மாதங்களில் முடிவடையும். இதையடுத்து வருகிற அக்டோபர் மாதம் முதல் இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர் அசோக்நகரில் இருந்து ஆலந்தூர் இடையே கூடுதலாக 4 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதே நேரம் ஷெனாய்நகரில் இருந்து அண்ணாநகர் டவர் வரை சுரங்க ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்துள்ளது.
தற்போது அண்ணாநகர் டவரில் இருந்து திருமங்கலம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த பணிகள் முடிந்த தும் ஷெனாய்நகர் - கோயம்பேடு வழியாக ஆலந்தூர் வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் அடுத்து ஆண்டு மத்தியில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications