ஆயிரத்தில் ஒருவனில் தொடங்கி மெரீனா சமாதி வரை... : எம்.ஜி.ஆரை பிரியாத ஜெயலலிதா
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்த ஜெயலலிதா, அவரைப் போலவே தமிழக மக்கள் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்து இன்று அவர் சமாதி அருகிலேயே அடக்கம் செய்யப்பட உள்ளார்.
சென்னை: தமிழ் திரை உலகிலும், அரசியல் வரலாற்றிலும் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து யாராலும் மறக்க முடியாதது. அதேபோல 1965ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்கத் தொடங்கிய ஜெயலலிதா 28 படங்கள் எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக நடித்தார்.
அடிமைப் பெண், கன்னித்தாய், காவல்காரன், அரசக்கட்டளை, தலைவன் என பல படங்களில் நடித்து ராமன்தேடிய சீதை வரை வெற்றிகரமான கதாநாயகியாக உயர்ந்தார்.

சினிமா டூ அரசியல்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி திமுகவிட்டு நீக்கப்பட்டார். அடுத்த ஒரு வாரத்தில் அதாவது அக்டோபர் 17ம் தேதி அதிமுகவை தொடங்கினார். சரியாக 10 ஆண்டுகள் கழித்து 1982 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டார் ஜெயலலிதா. கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர்
அதிமுகவை தொடங்கிய முதலே அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த எம்.ஜி.ஆர் மரணம் வரைக்கும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் வாழ்ந்து மறைந்தார். அதேபோல முதல்வர் ஜெயலலிதாவும் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக இறுதிவரை இருந்து முதல்வராக மறைந்துள்ளார்.
வரலாற்று வெற்றி
முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்த போது 1984ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அமெரிக்காவில் இருந்தபடியே வெற்றி பெற்று மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். அதே போல ஒரு வரலாற்று சாதனையை ஜெயலலிதா 32 வது ஆண்டுகளுக்குப் பின்னர் படைத்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வரானார்.
அப்பல்லோ ராசி
1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். அதைத் தொடர்ந்து உடல்நிலை மோசமடையவே, அமெரிக்காவிற்கு அழைத்து செல்லப்பட்டார் எம்.ஜி.ஆர். அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மீண்டும் மறுபிறவி எடுத்து வந்தார். அதேபோல 32 ஆண்டுகளுக்குப்பின்னர் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோவில் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார்.
டிசம்பர் ராசி
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவு மரணமடைந்தார். அதேபோல 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு நள்ளிரவில் மரணமடைந்தார்.
மெரினாவில் அடக்கம்
புரட்சித்தலைவர் எம்.ஜி,ஆரின் உடல் அண்ணாவின் இதயக்கனியாக இருந்தார். அவரது சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டார். அதேபோல எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக இதயக்கனியாக திகழ்ந்த ஜெயலலிதா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சமாதியின் அருகில் இன்றைக்கு அடக்கம் செய்யப்பட உள்ளார்.
புரட்சித்தலைவர் - புரட்சித்தலைவி
ஆயிரத்தில் ஒருவனில் தொடங்கிய ஜெயலலிதாவின் பயணம் எம்.ஜி.ஆருடன் அடக்கம் வரை நீடித்தது. இது அதிமுக தொண்டர்களால் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாகும். புரட்சித்தலைவர் என்ற பட்டம் எம்.ஜி.ஆருக்கு எத்தனை பொருத்தமானதோ, அதே போல தமிழக அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாக தொடர்ந்து இருந்த வந்த ஜெயலலிதாவிற்கு புரட்சித்தலைவி என்ற பட்டமும் பொருத்தமானதுதான் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications