ஃபேஸ்புக்னா என்னது? சென்னை புத்தக கண்காட்சியில் கலக்கிய 'எம்.ஜி.ஆர்.'
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் எம்.ஜி.ஆர். வேடமிட்டு வந்த நபர் எழுப்பிய கேள்விகள் கலகலப்பை ஏற்படுத்தியிருந்தது.
சென்னையில் வழக்கமாக ஜனவரியில் புத்தகக் கண்காட்சி நடைபெறும். ஆனால் பெருமழை வெள்ளத்தால் 39-வது புத்தக கண்காட்சி இம்முறை கடந்த 1-ந் தேதிதான் சென்னை தீவுத்திடலில் தொடங்கியது. இன்றுடன் இந்த புத்த கண்காட்சி நிறைவடைகிறது.
கடந்த 13 நாட்களாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது.
அப்படி வந்தவர்களில் எம்.ஜி.ஆர். வேடமிட்டு வந்த ஒருவர் புத்தக கண்காட்சியில் கலகலப்பை ஏற்படுத்தினார். இது குறித்து தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பதிவு செய்துள்ளதாவது:
நேற்று புத்தககண்காட்சியில் எம்ஜியார்(டூப்) உயிர்மை அரங்கிற்கு வந்திருந்திந்தார். பிரபு போட்டோ எடுப்பதைக்கண்டதும் உற்சாகமாக் போஸ் கொடுக்க தொடங்கினார்.
பிறகு ''இது நாளை எந்த பேப்பரில் வரும்?'' என்று கேட்டார்.'' பேப்பர்ல எல்லாம் வராதுங்க.. ஃபேஸ்புக்கில் வரும்?' என்றேன்.
‘அது என்னது‘ என்றவர் ‘'தந்தி பேப்பர்ல வந்தாத்தான் பவர்'' என்றார்.
எம்ஜியார் எம்ஜியார் காலத்திலேயே இருக்கிறார்!
இவ்வாறு பதிவிட்டுள்ளார் மனுஷ்யபுத்திரன்.