மக்கள் மனசுல என்ன இருக்கு தெரியுமா?.. யார் இருக்கான்னு தெரியுமா??.. ஜெயக்குமார் அதிரடி!
மக்கள் மனதில் இருப்பது எம்ஜிஆர், ஜெயலலிதாதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக மக்கள் மனதில் தாமரைக்கோ, சூரியனுக்கோ, மக்கள் நீதி மய்யத்திற்கோ இடமில்லை என்றும் மக்கள் மனதில் எப்போதும் இருப்பவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாதான் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.வி.கே.குப்பத்தில் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமான 60-ற்கும் மேற்பட்ட குடிசைகளை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.
கடுமையான நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியர்களுக்கு 14,000 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படுவதாக கூறினார். அனைவரின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணமாக இருந்தாலும் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு மனம் உள்ளது, ஆனால் பணம் தான் இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து, பாஜக எம்.பி. இல.கணேசன் அதிமுகவை விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தாமரை இல்லாமல் இலை இல்லை, இலை தள்ளாடி கொண்டிருப்பதாக கூறுபவர்கள் கற்பனை உலகத்தில் இருப்பதாக விமர்சித்தார்.
27 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தை அதிமுக ஆட்சி செய்து வருவதால், இனி வருங்காலத்திலும் அதிமுகதான் தமிழகத்தை தொடர்ந்து ஆளும் என்றார். மேலும் தாமரை, சூரியன், மய்யம் என எதற்கும் தமிழக மக்கள் மனதில் இடம் இல்லை என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் மனதில் எப்போதும் இருப்பவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாதான் என்றார்.