எம்ஜிஆர் நினைவு நாளான இன்று அதிமுக படுதோல்வியை சந்திக்கும் போலயே?
எம்ஜிஆர் நினைவு நாளான இன்று அதிமுக படுதோல்வியை சந்திக்கும் சூழல் நிலவும் என்று தெரிகிறது.
Recommended Video

சென்னை: எம்ஜிஆர் 30-ஆவது நினைவு நாளான இன்று அதிமுக படுதோல்வியை சந்திக்கும் சூழல் நிலவுகிறது.
ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்ட நிலையில் பணப்பட்டுவாடா தொடர்பாக அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதிலும் பணப்புகார் எழுந்து பின்னர் ஒருவழியாக தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடந்து முடிந்தது.

மக்கள் நாடி பிடித்து...
அதிமுக செயல்பாடுகளால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக கூறி தமிழகத்தின் உரிமைகளை பறிக் கொடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஓகி புயலால் குமரி கடலில் காணாமல் போன மீனவர்கள் குறித்து அதிமுக அரசு கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை என்பதே மக்களின் புகாராக உள்ளது.

ஆலோசனை கூட்டங்கள்
மக்கள் பிரச்சினைகளை காட்டிலும் கட்சி, பதவிக்காக அதிமுகவினர் போட்ட ஆலோசனை கூட்டங்கள்தான் அதிகம் என்பது மக்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. மேலும் ஜெயலலிதா இறந்தவுடன் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்கள், மக்கள் ஓட்டு போட்டது ஜெயலலிதாவுக்கு அல்ல, இரட்டை இலை சின்னத்துக்கு என்று பகிரங்கமாக பேசினர்.

வாக்கு எண்ணப்படுகிறது
சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தாங்கள் ஜெயிக்க வேண்டும் என முனைப்புடன் உள்ளது அதிமுக. இரட்டை இலையை பார்த்தவுடன் மக்கள் அதற்குத்தான் வாக்குகளை குத்துவார்கள் என்று எண்ணி அதை போராடி பெற்றது அதிமுக.

எம்ஜிஆர் நினைவு நாள்
பொதுவாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்பது எழுதப்படாத சட்டமாகும். ஆனால் இன்று வாக்கு எண்ணிக்கையை பார்க்கும் போது தினகரன் முன்னிலையில் உள்ளார். அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான கருத்து கணிப்புகளும் டிடிவி தினகரன்தான் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தன. இந்நிலையில் இன்று எம்ஜிஆரின் நினைவு நாளின்போது, அதிமுக படுதோல்வியை சந்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications