புதுச்சேரியில் 'பாண்லே' பால் விலை உயர்ந்தது
புதுச்சேரி: புதுவையில் பாண்லே நிறுவனத்தின் பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் விற்பனை விலையும் கூடியுள்ளது.
புதுவை அரசின் பாண்லே பாலின் கொள்முதல் விலையை, ரூ. 20லிருந்து ரூ. 24 ஆக உயர்த்துவதாக முதல்வர் ரங்கசாமி நேற்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து பால் விற்பனை விலையும் உயர்த்துள்ளது. பாண்லே நிறுவனம் இரண்டு வகையான பால்களை விற்பனை செய்து வருகிறது. 'டோன்ட்' பால் நீல நிற பாக்கெட்டிலும், பசும்பால் பச்சை நிற பாக்கெட்டிலுமாக விற்பனையாகிறது.
இதில் டோன்ட் பாலின் விலையில் மாற்றம் ஏற்படாத நிலையில், பசும்பால் பாக்கெட்டின் விலை ரூ. 14ல் இருந்து ரூ. 15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரூ. 5க்கு விற்கப்பட்டு வந்த 200 மி.லி. பாக்கெட் பால் ரூ. 6ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பால் விற்பனை முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இனி காலையில் பசும் பால் மட்டுமே கடைகளில் விற்பனை செய்யப்படும். மாலையில் மட்டும் நீல பாக்கெட் பால் விற்பனை செய்யப்படும்.