ஸ்டிரைக் ஆரம்பமாகிடுச்சு.... எக்ஸ்ட்ரா பால் பாக்கெட் வாங்கி வச்சுட்டீங்களா மக்களே!
சேலம்: அரசு நிர்ணயித்த பால் விலை தங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என இன்று முதல் காலவரையற்ற பால் நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் .
கடந்த மாதம் அரசு பால் விலையை உயர்த்தி அறிவித்தது. ஆனால், அரசு நிர்ணயம் செய்த விலையை எதிர்த்து தமிழகத்தில் பால்நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர்.
இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வேண்டுகோள்....
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பால் உற்பத்திச்செலவு 35 சதவீத உயர்வுக்கு ஏற்ப, லிட்டருக்கு ரூ.4.50 உயர்த்தப்பட்டது. இரு ஆண்டுகளில் கலப்பு தீவனம் 52 சதவீதம், பசுந்தீவனம் 100 சதவீதம், ஆட்கள் கூலி ரூ.200-ல் இருந்து 300 ஆக கூடியது. இந்த விலை உயர்வை கணக்கீட்டு பசும்பால் லிட்டருக்கு ரூ.20-ல் இருந்து ரூ.30 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.28-ல் இருந்து ரூ.41 ஆகவும் உயர்த்த கேட்டுக்கொள்ளப்பட்டது.

பெரும் நஷ்டம்....
ஆனால், அரசு லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தியது. இந்த விலை உயர்வு ஏற்புடையதாக இல்லை. இதனால், தினமும் பால் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்து வருகிறார்கள்.

கோமாரி நோய்க்கு இழப்பீடு...
தமிழகத்தில் சுமார் 30 ஆயிரம் கறவை மாடுகள் கோமாரி நோயால் இறந்துள்ளது. கறவை மாடுகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை எதுவும் வழங்க வில்லை.

கட்டுப்படியாகாது...
சங்க நிர்வாக செலவுக்கு, சங்கம் கொள்முதல் செய்யும் பால் லிட்டருக்கு 50 பைசா வழங்கும் விளிம்புத்தொகை போதாது. அதை 5 சதவீதம் உயர்த்தி கொள்ள அனுமதிக்க வேண்டும். 1 லிட்டர் பால் உற்பத்தி செலவே ரூ.34 ஆகிறது. எனவே, பசும் பால் லிட்டருக்கு ரூ.23-ல் இருந்து 30 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.31-ல் இருந்து ரூ.40 ஆகவும் விலை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

கால்நடைகளுடன் சாலைமறியல்....
எனவே, தமிழக அரசு எங்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கைக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை. எனவே, திட்டமிட்டப்படி இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் பால் நிறுத்த போராட்டமும், கால்நடைகளுடன் சாலைமறியல் போராட்டமும் நடத்தப்படும்.

அரசியல் கட்சிகள் ஆதரவு...
எங்களின் போராட்டத்துக்கு, சில அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அனைத்து விவசாய சங்கங்களும் ஆதரித்துள்ளன. மேலும் தனியாருக்கு பால் வழங்குபவர்களையும் ஆதரவளிக்க கேட்டு கொண்டிருக்கிறோம். பால் உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு வன்முறைக்கு இடமே இல்லை.

வன்முறைக்கு இடமளிக்கும்...
ஆனால், சங்கத்திற்கு பால் வராவிட்டால் பணி நீக்கம் செய்வதாக ஆளும் கட்சியினர் அதிகாரிகள் துணையுடன் சங்க செயலாளர்களை மிரட்டி வருகிறார்கள். இந்த நடவடிக்கைகள்தான் வன்முறைக்கு இடமளிக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications