விடாமல் துரத்தும் வழக்குகள்.. ராஜினாமா செய்ய மறுக்கிறாரா அமைச்சர் விஜயபாஸ்கர்?
சென்னை: குட்கா வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய மறுப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 2013-ஆம் ஆண்டு குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டது. இதையடுத்து மதுரவாயலில் ஒரு குடோனில் வருவாய்த் துறையினர் சோதனை நடத்தினர். அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது.
இதையடுத்து குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவிடம் விசாரணை நடத்தியதில் அவரிடம் இருந்து ஒரு டைரி கைப்பற்றிப்பட்டது. அதில் 2013-2016-ஆம் ஆண்டு காலகட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இருந்தன.
இடைத்தேர்தல்
இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சிபிஐ ரெய்டு நடத்தியது. இதனிடையே ஆர் கே நகர் இடைத்தேர்தல் முதல் முறையாக அறிவிக்கப்பட்ட போது தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
லஞ்சம்
இதையடுத்து அவரது வீட்டில் நடந்த வருமான வரி துறை சோதனையில் ரூ.89 லட்சம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுமட்டுமல்லாமல் மருத்துவ கல்லூரிகள் தொடங்குவது, துணை மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது, செவிலியர் பணி உள்ளிட்டவைகளுக்கு அவர் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.
போர்க் கொடி
அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு வருவாய் துறை கடிதம் அனுப்பியுள்ளது. எனவே அடுத்தடுத்த தொடர் புகார்களால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது முதல்வரே அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.
முதல்வரை சந்தித்து ஆலோசனை
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள், 2019-ஆம் ஆண்டு பொது தேர்தலை கருத்தில் கொண்டு சக அமைச்சர்களே விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என கூறியுள்ளனர். இவ்வாறு பல்வேறு தரப்பிலிருந்து முதல்வருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஜார்ஜ் செய்தியாளர்களை சந்தித்தபோது விஜயபாஸ்கரும் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
விஜயபாஸ்கர் மறுப்பு
அச்சமயம் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து முதல்வர், விஜயபாஸ்கரிடம் விவரித்திருக்கலாம் என்றும் எனவே பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்றும் அவர் கூறியிருக்கலாம் என்றும் தெரிகிறது. அப்போது தான் குற்றமற்றவர், எனவே பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிவிட்டதாக தகவல்கள் எழுந்துள்ளது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.