மந்திரிகளே, மந்திரிகளே.. கோபத்துடன் காத்திருக்கும் மக்கள்.. கொரட்டூர் கதையைக் கேளுங்கள்!
சென்னை: மழை பெய்து அது ஓய்ந்து இத்தனை நாளான நிலையில் இப்போதுதான் வெள்ளம் பாதித்த பல பகுதிகளுக்கு அமைச்சர் மார்கள் வேட்டிகளை மடித்துக் கட்டிக் கொண்டு எட்டிப் பார்க்கிறார்கள். இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொரட்டூருக்கு வெள்ளம் பாதித்த பகுதிகளை மிக மிகத் தாமதமாக பார்க்க வந்த பால்வளத்துறை அமைச்சர் பி.வி. ரமணா, அம்பத்தூர் எம்.எல்.ஏ. வேதாச்சலம் மற்றும் அதிமுக பிரமுகர், அதிகாரிகளுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு அவர்களை அங்கிருந்து கிளம்பிப் போகச் செய்தது.
வரலாறு காணாத கன மழையுடன், எதிர்க்கட்சிகளின் கண்டன மழையிலும் சிக்கி அதிமுக அரசு தவித்து வருகிறது. மக்களின் அதிருப்தி அலை மறுபக்கம்.
இந்த நிலையில் படு தாதமாக தங்களிடம் நலம் விசாரிக்க வந்த அமைச்சர், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ, மாநகராட்சி அதிகாரிகள் மீது கொரட்டூர் பகுதி மக்கள் பாய்ந்துள்ளனர்.
வெள்ளத்தில் மிதந்த கொரட்டூர்
வேளச்சேரியைப் போலவே, கனமழை காரணமாக கடந்த 9ம் தேதி முதல் சென்னை அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பழைய அக்ரஹாரம், சிவலிங்கபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும், வெள்ளத்தில் மூழ்கி, அந்த பகுதிவாசிகளின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
தீபாவளிக்கு முன்பிருந்தே
இந்தப் பகுதிகளில் தீபாவளிக்கு முன்பிருந்தே வெள்ளக்காடாக இருந்ததால் தீபாவளியையே இவர்கள் கொண்டாடவில்லை. மேலும் இவர்களுக்குத் தேவையான எந்த விமோச்சன நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போனதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
வாங்கய்யா வாங்க
இந்த நிலையில் மிக நீண்ட தாமதத்திற்குப் பின்னர் நேற்று அம்பத்தூர் எம்.எல்.ஏ. எஸ்.வேதாச்சலம், பால்வள துறை அமைச்சர் பி.வி.ரமணா, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சியினர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக்குச் சென்றனர்.
எங்கய்யா வந்தீங்க
அவர்களைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த மக்கள் கூட்டமாக சென்று அவர்களை முற்றுகையிட்டனர். காரை மறித்து அவர்கள் நின்றதால் காரிலிருந்து இறங்கிய அமைச்சர் ரமணாவிடம், பத்து நாட்களாக நாங்கள் மிதக்கிறோம். இப்போது எங்கே வந்தீர்கள் என்று கோபமாக கேட்டனர்.
ஒரு பயலும் வரவில்லை
மேலும் அவர்கள் ஆவேசத்துடன்,யாருமே இங்கு வரவில்லை. எந்த நடவடிக்கையும் இல்லை. கவுன்சிலர் கூட எட்டிப் பார்க்கவில்லை. இப்போது புதைக்கவா வந்துள்ளீர்கள் என்று கேட்டபோது அமைச்சர் முகத்தில் ஈயாடவில்லை.
அய்யா.. என் மகன்தாய்யா கவுன்சிலர்
இதையடுத்து எம்.எல்.ஏ பக்கம் திரும்பிய அமைச்சர்,யார் இந்த ஏரியா கவுன்சிலர் என்று கேட்க, என் மகன்தான் என்று அவர் பதிலளிக்க, இதையடுத்து கோபத்துடன் கொந்தளித்த பொதுமக்கள், இல்லை, இல்லை அவரது மருமகள்தான் கவுன்சிலர். தேர்தலுக்கு முன்பு அவரைப் பார்த்ததோடு சரி, அதன் பிறகு அவர் இந்தப் பக்கமே வந்ததில்லை என்று குமுற வேதாச்சலம் அரண்டு போனார்.
கோவம் மட்டும் பொத்துக்கிட்டு வருது
மேலும் அடுத்தடுத்து பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்க கோபமான வேதாச்சலம், அமைச்சர் முன்னிலையிலேயே மக்களைப் பார்த்து அமைதியா இருங்க என்று கத்தினார்.
ஓடு ஓடு ஓடு
இதனால் மக்கள் மேலும் கோபமடைந்தனர். வேதாச்சலத்தின் மருமகளும், கவுன்சிலருமான எழில்தேவி ஒழிக என்று கூறி கோஷமிட்டனர். இதனால் நிலைமை மோசமடைந்தது. இதையடுத்து அமைச்சர், எம்.எல்.ஏவைக் கண்டித்தார். ஆனாலும் மக்கள் அமைதி அடையவில்லை. இதையடுத்து அமைச்சர் உள்ளிட்டோர் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டனர்.