நமது எம்ஜிஆர் , ஜெயா டிவி - முரசொலி, கலைஞர் டிவியா மாறிடுச்சு...வேற யாரு ஜெயக்குமார் தான் சொல்றாரு!
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நமது எம்ஜிஆர் நாளிதழ் முரசொலியாகவும், ஜெயா டிவி கலைஞர் டிவியாகவும் மாறிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை : ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நமது எம்ஜிஆர் நாளிதழ் முரசொலியாகவும், ஜெயா டிவி கலைஞர் டிவியாகவும் மாறிவிட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழ் சசிகலா புகழ் பாடத் தொடங்கின. அவ்வபோது அரசு குறித்த செய்திகளும் வந்து கொண்டிருந்தன. ஆனால் சசிகலா சிறை சென்ற பின்னர் முதல்வர் பழனிசாமி கட்டுப்பாட்டிற்குள் அனைத்தும் செல்லத் தொடங்கியதில் இதில் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வந்தது.
முதல்வர் பழனிசாமியை ஒரு பிரேம், இரண்டு பிரேமில் காட்டி வந்தவர்கள், பின்னர் பழனிசாமி முழுவதும் சசிகலா எதிர்ப்பு அணியாக மாறியதும் அனைத்துக்குமே இருட்டடிப்பு தான். அதிலும் அரசுக்கு எதிரான செய்தி, பாஜகவை விமர்சிக்கும் கட்டுரை, கவிதை என்று ஜெயா டிவியும், நமது எம்ஜிஆர் நாளிதழும் பரிணாம வளர்ச்சி பெற்றது.
துரைமுருகன் நேர்காணல்
இதில் உச்சகட்டமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு திமுக சீனியர் தலைவர் துரைமுருகனின் பேட்டியை ஜெயா டிவி அரை மணி நேர நேரலையாக ஒளிபரப்பியது. இது அதிமுக மட்டுமல்ல திமுகவினரையும் ஆச்சரியப்பட வைத்தது.
டிஸ்மிஸ் ஆகும்
இந்நிலையில் இன்று டாக்டர் நமது எம்ஜிஆரில் ஒரு பெட்டி செய்தி வெளியாகியுள்ளது. அதில் தமிழக அரசு வரும் 25 அல்லது 26ம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கலைஞர் டிவியாகிவிட்டது
நமது எம்ஜிஆரில் வெளியான செய்தி குறித்த கேள்விக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் பேட்டியளித்தார். அப்போது அவர் டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ் முரசொலியாகவும், ஜெயா டிவி கலைஞர் டிவியாகவும் மாறி பல நாட்கள் ஆகின்றன என்று தெரிவித்தார்.
இதைவிடவா ஆதாரம் வேண்டும்
திமுகவுடன் தினகரன் அணி கூட்டு வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும். ஜெயா டிவியில் அரைமணி நேரம் துரைமுருகனின் பேட்டியை ஒளிபரப்பியதன் நோக்கம் என்ன என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.