ஜிஎஸ்டி அறிமுக விழா.. அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு !
டெல்லி: ஜிஎஸ்டி அறிமுக விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதிமுக சார்பில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் இந்த விழாவில் பங்கேற்றுள்ளார்.
நீண்ட கால இழுபறிக்கு பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் அறிமுக விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதேபோல் அதிமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் பாஜக அழைப்பு விடுத்திருந்தது.
மத்திய அரசு அவசர கதியில் புதிய வரி விதிப்பு முறையை அமல்படுத்த முயல்வதாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. அதேபோல் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளும் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
இதே போன்று, பிகார் மாநிலத்தில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. அதிமுக சார்பில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் ஜிஎஸ்டி அறிமுக விழாவில் பங்கேற்றுள்ளார்.
முன்னதாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஜிஎஸ்டி-யால் விலைவாசி உயராது. ஒருவேளை ஜிஎஸ்டி-யால் விலைவாசி உயரும் பட்சத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும். விலை உயரும் பொருளின்மீது விதிக்கப்பட்டிருக்கும் வரியின் அளவு குறைக்கப்படும் என்றார்