பெட்ரோல் விலை குறைக்க அரசுக்கு மனம் உள்ளது.. ஆனால் பணம் இல்லை: ஜெயக்குமார்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க அரசிடம் நிதி இல்லை என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: பெட்ரோல் விலையை குறைக்க அரசுக்கு மனம் இருக்கிறது, ஆனால் போதிய பணம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
வரிகுறைக்க வேண்டும்
அதேபோல கடந்த 3 தினங்களுக்கு முன்பு கூட, தமிழக அமைச்சர் ஜெயக்குமார், பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்வதை தடுக்க மத்திய அரசு விதிக்கும் எக்சைஸ் வரியை 16 ரூபாயிலிருந்து 8 ரூபாயாக குறைக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.
ஜெயக்குமார் பதில்
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து பெட்ரோல், டீசல் விலைஉயர்வு மற்றும் 7 பேர் விடுதலை குறித்த கேள்விகளை எழுப்பினர். அதற்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்: "7 தமிழர்களை விடுதலை செய்வதில் அதிமுக அரசுக்கு மாறுபட்ட கருத்து எதுவுமே இல்லை. அதேபோல மக்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது.
ஸ்டாலின் விலகுவாரா?
ஆனால் இந்த 7 பேர் விடுதலை விவகாரத்தில் கூட்டணி கட்சியான காங்கிரசிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்த தயாராக இருக்கிறாரா? அப்படி 7 பேரையும் விடுதலை செய்வதற்கு காங்கிரஸ் ஒத்துழைக்காவிட்டால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஸ்டாலின் விலகுவாரா? கூட்டணியிலிருந்து விலகுவோம் என்று அவர் கூற வேண்டும்.
பணம் இல்லையே
அதேபோல, பெட்ரோல் டீசல் விலை உயர்வினை ஏற்றுக்கொள்ள முடியாது. பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்க தமிழக அரசுக்கு மனம் இருக்கிறது, ஆனால் போதிய பணம் இல்லை. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தந்தால்தானே விலையை குறைக்க முடியும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.