10 வருஷமா டிடிவி தினகரன் எங்கே போனார்.. என்ன சொல்லி வாக்கு கேட்பார்.. அமைச்சர் உதயகுமார் கேள்வி?
அமைச்சர் உதயகுமாரை தினகரன் கடுமையாக சாடியுள்ளார்.
10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இல்லாத டிடிவி தினகரன், எந்த சாதனையை சொல்லி திருப்பரங்குன்றத்தில் வாக்கு சேகரிக்கப்போகிறார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ போஸ் சமீபத்தில் மரணமடைந்தார். அதனால் இந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தலில் வரஉள்ளது.
டிடிவி சவால்
இந்த இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமமுக வெற்றி பெறும் என டிடிவி தினகரன் சவால் விடுத்திருந்தார். தினகரனின் இந்த கருத்து குறித்து நேற்று திருமங்கலம் வந்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரிடம் கேள்வி எழுப்பினர்.
இரட்டை இலை கோட்டை
அதற்கு பதிலளித்த அமைச்சர், தினகரனின் பேச்சு ஒரு பகல் கனவு என்றும் அந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் கூறினார். டிடிவி தினகரன், தாய் வீட்டை பிரிந்து தனிக்குடித்தனம் சென்று விட்டார் என்று கூறிய உதயகுமார், திருப்பரங்குன்றம் தொகுதி இரட்டை இலையின் கோட்டை, அதனால் டி.டி.வி.தினகரன் அங்கு எப்போதுமே வெற்றி பெற முடியாது.
10 ஆண்டுகள் எங்கே போனார்?
இதனை தொடர்ந்து பேரையூரில் இன்று மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலேயே இல்லாத தினகரன் எந்த சாதனையை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க போகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
பரமாத்மா என்பதா?
10 ஆண்டுகளாக டிடிவி தினகரன் எங்கே போனார் என்றே தெரியாமல், திடீரென்று வானத்தில் இருந்து குதிப்பதை போல் குதித்துவிட்டு, நான்தான் பரமாத்மா என்றால் யார் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்தார்.