தேவையில்லாமால் அதிமுக எனும் சிங்கத்துடன் மோதுகிறார் கமல்ஹாசன்...அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாய்ச்சல்
தமிழக அரசை விமர்சிக்கும் யோக்கியதை கமல்ஹாசனுக்கு இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: தமிழக அரசை விமர்சித்து இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள கமல் ஹாசனுக்கு தமிழக அரசை விமர்சிக்கும் யோக்கியதை கிடையாது என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் சுதந்திர தினமான இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்த போதிலும் முதல்வர் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எந்த கட்சியும் கோராதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு கடும் கண்டனத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசை விமர்சிக்கும் யோக்கியதை கமல்ஹாசனுக்கு இல்லை என்று தெரிவித்துள்ள ராஜேந்திர பாலாஜி, விளம்பரத்துக்காகத் தேவையில்லாமல் சிங்கத்துடன் கமல் மோதுகிறார் என்று எச்சரித்துள்ளார்.

கிண்டல் அறிக்கை
ஜெயலலிதா இறந்த போதே, கிண்டல் செய்வது போன்றுதான் அறிக்கை வெளியிட்டவர் கமல். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமே இல்லாதவர் அவர் அதிமுகவை விமர்சிக்கத் தேவையில்லை என்றும் கூறினார்.

பொத்தாம் பொதுவாகக் கூறுவதா?
தமிழகத்தில் வகுப்பு சண்டை, இனச் சண்டை, மதச் சண்டை என எதுவுமே நடைபெறவில்லை. பொத்தாம் பொதுவாக சொல்லாமல் என்ன ஊழல் நடந்தது என்று கமல் சொல்ல வேண்டாமா என்றும் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

காழ்ப்புணர்ச்சி
மேலும், விஸ்வரூபம் பட பிரச்சனையில் இருந்தே கமலுக்கு அதிமுகவின் மீது காழ்ப்புணர்ச்சி இருந்து வருகிறது என்று அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். அதனால்தான் தொடர்ந்து கமல் அதிமுகவை விமர்சித்து வருகிறார் என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.

திமுக பேச்சாளர் கமல்
கமல்ஹாசன் பேசும் கருத்தெல்லாம் திமுக நடிகரின் கருத்தாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றும் திமுகவின் குரலாகவே கமல்ஹாசன் பேசி வருகிறார் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் எங்கு ஊழல் இருக்கிறது என்று ஆணித்தரமாக நிரூபிக்க முடியுமா என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications