அரசு பள்ளிகளை ஊக்குவிக்காமல் தனியார் பள்ளி சேர்க்கைக்கு அச்சாரம்போடும் பள்ளிக் கல்வி அமைச்சர்
அரசு பள்ளிகளை ஊக்குவிக்காமல் தனியார் பள்ளிகளின் சேர்க்கைக்கு அச்சாரம் போடும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பரிந்துரை கடிதத்தால் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: அரசு பள்ளிகளை ஊக்குவிக்காமல் தனியார் பள்ளிகளின் சேர்க்கைக்கு அச்சாரம் போடும் விதமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனின் பரிந்துரை கடிதம் கல்வியாளர்கள் முன்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தனியார் பள்ளிகளை காட்டிலும் பல்வேறு அரசு பள்ளிகள் சிறப்பாக இயங்கி வருகிறது என்று சொல்லும் அளவுக்கு அவற்றின் தரம் உயர்ந்துள்ளது. என்னதான் அவற்றின் தரம் உயர்ந்தாலும் அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் விரும்புவதில்லை.
அரசு பள்ளிகளில் படித்தால் ஆங்கிலப் புலமை இருக்காது, கல்வி சார்ந்த மற்ற செயல்பாடுகள் இருக்காது, நல்ல மதிப்பெண் கிடைக்காது என்பது பெற்றோர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

தனியார் பள்ளிகள்
பெற்றோர்களின் இத்தகைய அணுகுமுறையால் தடுக்கி விழும் தூரத்துக்கு மழையில் முளைக்கு்ம காளான்கள் போல் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் கட்டண கொள்ளையும் நடைபெறுகிறது. இன்னும் சில பள்ளிகள் பெற்றோரிடம் இருந்தே கட்டணத்தை பெற்றுக் கொண்டு கட்டடங்களை கட்டி வருகின்றன. இதற்கு முறையான ரசீதும் அளிப்பதில்லை.

கட்டணக் கொள்ளை
சாதாரண எல்கேஜி சேர்ப்பதற்கு குறைந்தது ரூ.60 ஆயிரம் முதல் பெற்றோர் செலவிடுகின்றனர். அதிலும் எல்கேஜி குழந்தைக்கு லேப் சார்ஜஸ் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இது என்ன என்று கேட்டால், கணினி பயன்பாட்டுக்கான கட்டணமாம். உண்மையில் பார்த்தோமேயானால் கணினிகளை அவர்கள் தொட்டு பார்க்க கூட அனுமதிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்.

நமக்கு ஒருவர்
இந்த கட்டணக் கொள்ளையால் பாதிக்கப்படும் பெற்றோர் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற முறையை பின்பற்றி வருகின்றனர். இது குறித்து கேட்டால் இந்த காலத்தில் ஒரு குழந்தையை படித்து ஆளாக்கவே இருவரும் சேர்ந்து உழைக்கும் நிலையில் இன்னொரு குழந்தையை ஆளாக்குவது எப்படி என்பதால் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கின்றனர்.

அரசு ஊழியர்களின் குழந்தைகள்
அதிக கட்டணக் கொள்ளை என்ற பிரச்சினை எழும்போதெல்லாம் அரசு பள்ளிகளின் தரத்தை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் உயர்த்தவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தற்போது அரசு பள்ளிகளின் தரம் உயர்த்துப்பட்டு வருகிறது. எனினும் அரசு பள்ளிகளில் அரசு ஊழியர்களின் பிள்ளைகளும், அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் படித்தால் மட்டுமே அதன் தரம் உயர்த்தப்படும் என்ற பொதுமக்கள் கருதுகின்றனர்.

அரசு மருத்துவமனை
அதேபோல் அரசு மருத்துவமனையில் ஏழைமக்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்றால் அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது நீண்ட கால கோரிக்கையாகும்.

கிரேடு முறைக்கு குட்பை
ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது மாநில அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களின் பள்ளி நிர்வாகம் மாணவர்களின் புகைப்படங்களுடன் அவர் பெற்ற மதிப்பெண்களையும் போட்டு தங்கள் பள்ளிக்கு விளம்பரம் தேடி கொள்கின்றனர். இதனால் குறிப்பிட்ட அந்த பள்ளியில் சேர்க்கை பெற பெற்றோர் முதல் நாள் இரவு முதலே தேவுடு காத்து வந்த நிலை உள்ளது. இதை ஒழிக்க கிரேடு முறையை கடந்த பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான போது அரசு அகற்றியது. இதனால் எந்த தனியார் பள்ளிகளும் கூப்பாடு போடாமல் உள்ளது குறைந்துள்ளது.

அமைச்சர் சிபாரிசு கடிதம்
தமிழக அரசின் இத்தகைய கிரேடு முறை ஒழிப்பை கல்வியாளர்களும், பெற்றோரும் வரவேற்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பில் குழந்தையை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிபாரிசு செய்து அவர் லெட்டர் பேடில் கையெழுத்து போட்ட கடிதம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இது பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள் மனதில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரே இப்படி செய்யலாமா?
தங்கள் ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது என்று ஆண்டுதோறும் பொதுத் தேர்வு முடிவுகளின் போது மார்தட்டி கொள்ளும் ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் இது போல் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பது சரியா? அமைச்சரை சந்தித்து கடிதம் பெற்றவர்கள் என்றாலே அந்த நபர் பணபலமும், நல்ல செல்வாக்கும் உடையவர் என்று தானே அர்த்தம். அப்படியெனில் பணம், செல்வாக்கு படைத்தவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்பதே தமிழகத்துக்கு அமைச்சர் சொல்லும் மெஸேசா என்று கருத வேண்டியுள்ளது.

திகைத்து போன அரசு பள்ளி ஆசிரியர்கள்
அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் மாணவனை முன்னேற்றி விட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் உயிரை கொடுத்து பாடம் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள், அமைச்சரின் சிபாரிசு கடிதத்தை கண்டு திகைத்து போயுள்ளனர். அரசு பள்ளிகள் தரம் உயரவில்லை என்பதை அமைச்சரே ஒப்புக் கொள்கிறார் என்று தானே அர்த்தம். இதன் மூலம் தவறான முன்னுதாரணத்தை அமைச்சர் செய்துவிட்டார் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் மனதளவில் உடைந்து விட்டனர்.

இதுதான் நீதி
இல்லாதவனுக்கு அரசு மருத்துவமனையும், இருப்பவனுக்கு தனியார் மருத்துவமனையும், ஏழைக்கு அரசு பள்ளிக் கூடமும், பணக்காரனுக்கு தனியார் பள்ளிக் கூடமும் என்ற எழுதப்படாத விதி உள்ளது. அதை அமைச்சரும் தனது சிபாரிசு கடிதம் மூலம் நிரூபித்து விட்டார். அரசு பள்ளிகளின் சேர்க்கைக்கு அச்சாரம் போடாமல் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு துணை போகும் இந்த அமைச்சரை என்ன சொல்வது. தனியார் பள்ளிக்கு செல்லும் பெற்றோரை தடுக்க முடியாவிட்டாலும் இதுபோன்ற சிபாரிசு கடிதங்களை தவிர்க்கலாமே என்பதுதான் ஆதங்கம்.












Click it and Unblock the Notifications