"அம்மா" மீண்டும் முதல்வராக வேண்டி இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்குப் போன வளர்மதி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சென்னையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி போய் பதினெட்டு படியேறி வழிபாடு செய்தார் தமிழக அமைச்சர் பா.வளர்மதி.
ஜெயலலிதா மீன்டும் தமிழக முதல்வராக வேன்டி அதிமுகவினர் தொடர்ந்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சர்ச்சுகளுக்கும் போகிறார்கள். பள்ளிவாசல்களையும் விடவில்லை.
இந்த நிலையில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா.வளர்மதி மற்றும் அவருடன் சேர்த்து 32 மகளிர் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் ஆலயத்தில் இருமுடி கட்டி ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று பதினெட்டு படியேறி வழிபாடு செய்தனர்.
இந்த வழிபாட்டில் கவுன்சிலர்கள் நுங்கைமாறன், டி.சிவராஜ், புஷ்பநகர் ஆறுமுகம் உள்பட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டு ஐயப்பன் கோவிலைக் கலக்கி விட்டனர்.
இந்த இருமுடி ஊர்வலத்தின்போது ஜெயலலிதாவின் பெரிய சைஸ் புகைப்படத்தை ஒருவர் உயர்த்திப் பிடித்தபடி வளர்மதிக்கு பின்புறம் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.