சுப்பிரமணியனுக்கு ஆதரவு பெருகுகிறதாமே ஸ்ரீரங்கத்தில்... தமிழிசை சொல்கிறார்!
சென்னை: ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டுள்ள அமைச்சர்கள் அங்குள்ள அரசு அதிகாரிகளை மிரட்டுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 13 லட்சம் பேர் கட்சியில் சேர்ந்துள்ளனர். அடுத்த 2 மாதங்களில் 60 லட்சம் பேரை கட்சியில் சேர்க்க உள்ளோம்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் சுப்பிரமணியனுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஸ்ரீரங்கத்தில் இருப்பது மும்முனை போட்டியே. அதிமுக, திமுகவுக்கு மாற்றுக் கட்சி என்பதை வைத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு வாக்கு சேகரித்து வருகிறோம். ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக பாஜக பொதுச் செயலாளர் நரேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நான் இன்று, நாளை என இரண்டு நாட்கள் ஸ்ரீரங்கத்தில் வாக்கு சேகரிக்கிறேன். மேலும் மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வராக இருக்க முடியாது என்பதால் தான் ஸ்ரீரங்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. மீண்டும் ஊழல் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் மக்கள் கவனமாக உள்ளனர். ஸ்ரீரங்கத்தில் 27 அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் துறை வாரியாக அரசு அதிகாரிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்களிடம் கட்டாய வசூலும் நடந்து வருகிறது. இது குறித்து பல புகார்கள் எழுந்துள்ளன என்றார்.