சிஎம் வீட்டில் அமைச்சர்கள்.. ஓபிஎஸ் வீட்டில் ஆதரவாளர்கள்.. ஒரே பிசி.. யாருக்காக?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் ஒபிஎஸ் வீட்டிலும் ஆலோசனை நடக்கிறது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் மூத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேபோல முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டிலும் ஆலோசனை நடைபெறுவதால் கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிளவு பட்டிருந்த அதிமுக அணிகளை இணைக்கும் முயற்சியில் தம்பித்துரை தலைமையிலான குழு இறங்கியது. சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு சம்மதிப்பேன் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறவே, இதற்காகவே காத்திருந்த அமைச்சர்கள் டிடிவி தினகரன், சசிகலா குடும்பத்தினரை கட்சி மற்றும் ஆட்சியிலிருந்து ஒதுக்குவதாக அறிவித்தனர்.
டிடிவி தினகரன் வீட்டிற்கு அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவு நேரத்திலும் திரண்டனர். எம்எல்ஏக்கள் சிலர் அமைச்சர்களுக்கு எதிராக பேசினர். தனது ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து இன்று கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் டிடிவி தினகரன். ஆனால் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்ட அதிகாரமில்லை என்று அமைச்சர்களும், அவைத்தலைவர் செங்கோட்டையனும் கூறியுள்ளார். இதுவே தினகரனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் வீட்டில் ஆலோசனை
இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று காலை முதல்வர் பழனிசாமி வீட்டிற்கு மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எம்எல்எக்கள் வந்தனர். அங்கு கட்சியை நடத்த குழு அமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

பேசியது என்ன?
ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைப்பது பற்றியும் பேசியதாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். இதே போல ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அமைச்சர் சி.வி. சண்முகம், கட்சியை நடத்த குழு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறினார்.

ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை
இதனிடையே கிரீன்வேஸ் சாலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு காலையில் மனோஜ்பாண்டியன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் வந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், டிடிவி தினகரனுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் ஒபிஎஸ் வீட்டில் ஆலோசனை நடைபெறுகிறது.

ஒரே பரபரப்பு
கிரீன்வேஸ் சாலையில் காலை முதலே முதல்வர் வீட்டிலும் முன்னாள் முதல்வர் வீட்டிலும் ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெறுவதால் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது. இந்த ஆலோசனைக்கூட்டம் மக்களுக்கானதல்ல.. எல்லாம் தங்களின் பதவியைக் காப்பாற்றிக்கொள்வதான கூட்டம்தான்... ஆனால் இதைப்பற்றி கவலைப்படாத மக்கள் தங்களின் வேலையை கவனித்துக்கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை.












Click it and Unblock the Notifications