முதல்வரும் அமைச்சர்களும் வளர்த்த தாடிகள்.. எப்போது போகும்?
சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றதை அடுத்து அதை துக்க நிகழ்வாக அனுஷ்டித்து கறுப்பு சட்டை அணிய ஆரம்பித்தனர் அதிமுகவினர்.
ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் என்பதால் கறுப்பு சட்டை அணியவில்லை மாறாக வெள்ளையோடு வெள்ளை வேட்டியோடு இருந்தாலும் சோகத்தை வெளிக்காட்ட தாடி வளர்க்க ஆரம்பித்தார்.
தாடி யாருக்கு அழகு
பிரதமர் மோடி முதல் பலரையும் தாடியை பார்த்திருந்தாலும் பன்னீர் செல்வத்தின் தாடி சோக தாடி என்பதால் முதல்வரின் தாடியை வைத்து ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் முதல் கார்டூன்கள் வரை வரைய ஆரம்பித்தனர்.

அமைச்சர்களும் தாடியில்
அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, செந்தில் பாலாஜி, காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.எஸ்.எம்.ஆனந்தன், செல்லூர் ராஜு, ரமணா, எம்.சி.சம்பத், ஜெயபால் ஆகியோரும் இதைப் பார்த்து தாடி வளர்க்க ஆரம்பித்தனர். சில அமைச்சர்களுக்கு தாடி சரியாக வளரவில்லை. ஆனாலும், முடிந்தவரை தாடியை வளர விட்டனர். குறிப்பாக அமைச்சர்கள் வேலுமணி, எம்.சி.சம்பத் ஆகியோருக்கு சரியாக தாடி வளரவில்லை. ஆனாலும், வந்தவரைக்கும் வரட்டும் என்று வளர்க்க ஆரம்பித்தனர்
தாடி கேபினட்
முதல்வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பலரும் தாடி வளர்க்கத் தொடங்கினர். இதனால் தமிழக அமைச்சரவையே 'தாடிவாலா' அமைச்சரவையாக இருந்தது.
தாடி சபதம்
அம்மா வெளியில் வரும் வரைக்கும் தாடியை எடுக்க மாட்டேன். அவங்க வந்த பிறகு திருப்பதிக்கு போய்ட்டு வந்துதான் தாடி எடுப்பேன்' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருந்தார் ஓ.பன்னீர் செல்வம் என்றும் செய்திகள் வந்தன. ஆனால், கடந்த 18ம் தேதி ஜெயலலிதா சென்னை திரும்பியும் இன்னும் தாடியை எடுக்கவில்லை முதல்வர்.
நிரந்தர தாடி அமைச்சர்கள்
அமைச்சர்கள் டி.கே.எம்.சின்னையா, கே.சி.வீரமணி ஆகிய இருவரும் எப்போதும் தாடியுடன் இருப்பவர்கள். அதனால், அவர்களுக்கு ஜெயலலிதா சிறைக்குப் போனதையடுத்து தாடி பிரச்சனை எதுவும் வரவில்லை.
அம்மாவை பார்த்த பின்னர்
கோவிலுக்கு நேர்ந்து கொண்டு தாடி வைத்தவர்கள், சாமி தரிசனம் செய்த பின்னரே தாடி எடுப்பார்கள். அம்மா சென்னை வந்தாலும் முதல்வர் பன்னீர் செல்வத்தை தவிர இன்னமும் யாரை பார்க்கவில்லையாம். எனவே அதே தாடியோடு அம்மாவை பார்த்த பின்னரே தாடியை எடுக்கலாம் என்று இருக்கின்றனர் அமைச்சர்கள் என்கிறார்கள்.
களி சாப்பிட்ட முன்னாள்கள்
இன்னாள் அமைச்சர்கள் தாடி சாப்பிட்டு சோகத்தை வெளிக்காட்டிய நேரத்தில் முன்னாள் அமைச்சர்கள் சிறைவாசலில் களி சாப்பிட்டு சோகத்தை பங்கு போட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் முனுசாமி
ஜெயலலிதா சிறையில் இருந்த நாட்களில் மதிய உணவுடன் ஸ்பெஷலாக களியும் பரிமாறப்பட்டது. 'அம்மா ஜெயில்ல இருக்கும்போது நாமும் களி திங்கிறதுதான் சரி' என்று முனுசாமி சொல்லியிருக்கிறார். மற்றவர்களும் அதை ஆமோதித்து களி சாப்பிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த கட்சிப் பிரமுகர்களும் இதே களியை சாப்பிட்டனராம்.












Click it and Unblock the Notifications