நெருங்கும் சீசன்.. குற்றாலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு
குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும்.அவர்களது பாதுகாப்பு குறித்தும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி: குற்றால சீசன் தொடங்க உள்ளதை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜ லட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் களை கட்டும். இங்கு சீசனை அனுபவிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் 25 முதல் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம்.
அடுத்த மாதம் சீசன் தொடங்க உள்ள நிலையி்ல், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்ப்படுத்திக் கொடுக்கவும். அவர்களது பாதுகாப்பு குறித்தும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜ லட்சுமி மற்றும் மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் குழுவினரோடு ஆய்வுகளை மேற்கொண்டார்.
மெயினருவி அருவிக்கரையில் சுற்றி பார்த்து ஆய்வுக்களை மேற்கொண்ட அவர்கள் அங்கு குளித்து முடித்து வந்த சுற்றுலாப் பயணிகளிடம் குற்றாலத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கு இருந்து சென்ற அவர் குற்றாலத்திலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் விடுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; இந்தியாவில் தமிழகம் தான் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. விரைவில் குற்றாலத்தை சுற்றுலா வரைப்பாடத்தில் இடம் பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் இது குறித்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிடும் என்று நம்புவதாகவும் ,முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு சுற்றுலாத்துறை முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்ககளை செயல்படுத்தி வருவதாகவும், சுற்றுலாபபயணிகளின் நலனைக்கருத்தில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.