சேலத்தில் பாமக வேட்பாளரை தாக்கி மண்டையை உடைத்த மர்ம நபர்கள்
சேலம்: சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் அருளை மர்ம நபர்கள் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் சேலம் மேற்கு தொகுதியில் பாமக சார்பில் அருள் என்பவர் போட்டியிடுகிறார். தேர்தலையொட்டி அவர் மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு அவர் தனது அலுவலகத்தில் இருந்தபோது திடீர் என மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர்.

அலுவலகத்திற்குள் புகுந்த அவர்கள் அருள் மற்றும் அவரது உதவியாளரை தாக்கினர். இதில் அவர்கள் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அருள் மற்றும் அவரது உதவியாளரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அருளின் அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த கார் கண்ணாடியையும் மர்ம நபர்கள் உடைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேட்பாளர் தாக்கப்பட்டதால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications