இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாமின் 85வது பிறந்த நாள் இன்று #APJAbdulKalam
சென்னை: மண்ணின் பிறந்த அனைவருமே மகான்களாக மாறுவதில்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்த அனைவருமே சரித்திரம் படைத்ததில்லை. இந்தியாவின் கடைக்கோடியில் ராமேஸ்வரத்தில் மீனவ கிராமத்தில் பிறந்த அப்துல் கலாம் இந்தியாவின் உயரிய பதவியான இந்திய குடியரசு தலைவராக தன்னம்பிக்கையாலும், முயற்சியாலும் முன்னேறியவர். இந்த வகையில் இந்திய இளைஞர்களுக்கு அவர் வாழ்ந்துகாட்டி, வழிகாட்டியாகவும் செயல்பட்டு எழுச்சி நாயகனாக மாறியுள்ளார். அவரது 85 வது பிறந்த தினம் இன்று இளைஞர்களின் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
விஞ்ஞானிகள், அறிஞர்கள், கவிஞர்கள், தத்துவ மேதைகள், ஈடு இணையில்லா தலைவர்கள் என பலரையும் இந்தியாவிற்கு தமிழன்னை வழங்கியுள்ளாள். அந்த வகையில் 'இந்தியாவின் ஏவுகணை நாயகன்' என்றும், 'அணுசக்தி நாயகன்' என்றும், 'தலைசிறந்த விஞ்ஞானி' என்றும், 'திருக்குறள் வழி நடந்தவர்' என்றும், 'இளைஞர்களின் எழுச்சி நாயகன்' என்றும் போற்றப்படும் பன்முகத் தலைவர் 'பாரத ரத்னா' டாக்டர் ஹமீது அப்துல் கலாம் அவர்கள் தமிழகம் பெற்றெடுத்த தலைமகன் ஆவார்.
இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அழைக்கப்படும் அவுல் பக்கீர் ஜெயினுலாவுதீன் அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஜெயினுலாவுதீன் மரைகாயர். தாய் ஆஷியம்மாள். வறுமை குடும்பத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பின் போது நாளிதழ்களை விற்று அதன் மூலம் படித்தவர்.

ஏவுகணை நாயகன்
தனது ஆரம்ப கல்வியை ராமேஸ்வரத்தில் முடித்த அப்துல் கலாம் உயர்கல்வியை ராமநாதபுரத்தில் முடித்தார். பின்னர் திருச்சி ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம், சென்னை எம்.ஐ.டியில் எரோநாட்டிக்கள் பட்டமும் பெற்றார். அதன்பிறகு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் 1963ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த அவர் 20 ஆண்டுகளாக கேரளாவில் உள்ள தும்பா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்தார்.

அக்னி மனிதர்
பின்னர், ஒடிஷா மாநிலம் சண்டிபூரில் உள்ள ராக்கெட் ஏவுகணைத் தளத்திலும் 20 ஆண்டுகளாக அவர் பணியாற்றினார். பிறகு அக்னி, பிருத்வி உள்ளிட்ட பல ஏவுகணைகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை நடத்தினார் கலாம்.

அறிவியல் ஆலோசகர்
1982ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியா நடத்திய பொக்ரைன் அணுகுண்டு சோதனைக்கு மூளையாக அப்துல் கலாம் செயல்பட்டார் . அவர் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராகவும் 1999 நவம்பர் முதல் 2001 நவம்பர் வரை பணியாற்றினார்.இதேபோல் அறிவியல் ஆலோசனைக்குழுவின் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.

விருதுகளுக்கு பெருமை
அப்துல் கலாமிற்கு, மத்திய அரசு கடந்த 1981ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 1990ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவித்தது. அதனைத் தொடர்ந்து நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கலாமிற்கு கடந்த 1997ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

குடியரசுத்தலைவர்
2002ம் ஆண்டு இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் தேர்தெடுக்கப்பட்டார் . மக்கள் குடியரசு தலைவராக இருந்த இவர் மாணவர்களிடம் அதிகமாக உரையாடினார். மரம் வளர்ப்பு,சுற்றுசுழல் பாதுகாப்பு போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். இந்திய வல்லரசாக வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்.

சிறந்த ஆசிரியர்
அப்துல் கலாம் அவர்கள் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார். இளைய தலைமுறையினரையும், மாணாக்கர்களையும் தனது பேச்சினாலும், கருத்துகளாலும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் ஊக்க சக்தியாவும் விளங்கினார்

கனவு காணுங்கள்
இந்தியா வல்லரசாக உருவெடுக்க, மாணாக்கர்களிடையே தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதால் தான் மாணாக்கர்களை, ‘கனவு காணுங்கள், அந்தக் கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக் கூடாது. உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்' என தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக எடுத்துக் கூறினார். ‘வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டமில்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி' என வெற்றியின் ரகசியத்தை மாணாக்கர்களுக்கு போதித்தார் கலாம்.

மாணவர்கள் மத்தியில் மரணம்
மாணவர்கள் என்றால் கலாமிற்கு கொள்ளை பிரியம். கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றி கொண்டிருக்கையில் மயங்கி விழுந்து உயிர் துறந்தார் அப்துல் கலாம்.

இந்தியா வல்லரசு
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக இருந்த கலாம், அக்னி சிறகுகள், இந்தியா 2020, மிஷன் இந்தியா போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
2020ல் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்பது அவரது கனவு.அவரது கனவை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் கலாமின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. அப்துல் கலாமின் 85வது பிறந்தநாளை ஒன் இந்தியா தட்ஸ் தமிழ் இணையமும் பெருமையுடன் கொண்டாடி மகிழ்கிறது.












Click it and Unblock the Notifications