மாயமான டோர்னியர் விமானத்தை சல்லடை போட்டுத் தேடும் நீர்மூழ்கி கப்பல் சிந்துத்வாஜ்
கடலூர்: மாயமான கடலோர காவல்படை விமானமான டோர்னியரை தேடும் பணியில் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் சிந்துத்வாஜ் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கடந்த 8ம் தேதி பாக் ஜலசந்திக்கு ரோந்து பணிக்கு சென்ற கடலோர காவல்படை விமானமான டோர்னியர் அன்று இரவு சென்னைக்கு திரும்புகையில் நாகை அருகே மாயமானது. விமானத்தில் விமானி, துணை விமானி மற்றும் வழிகாட்டி என்று 3 பேர் இருந்தனர்.

விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதுச்சேரி பகுதியில் தேடல் பணி நடந்து வந்தது. விமானத்தை தேடும் பணியில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் உள்பட 15 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து வரும் சிக்னலை ஐஎன்எஸ் சந்தாயக் கண்டுபிடித்தது.
இதையடுத்து சிக்னல் வந்த இடத்தில் தேடலை நடத்த கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சிந்துத்வாஜ் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு காரைக்கால்-கடலூர் கடற்பகுதிக்கு வந்தது. சிந்துத்வாஜ் கடலுக்கு அடியில் விமானத்தை தேடும் பணியை துவங்கியுள்ளது. சந்தாயக் கப்பல் கண்டுபிடித்த சிக்னல் மாயமான விமானத்தில் இருந்து வந்ததா என்பதை கண்டறியும் பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே கடலுக்கு அடியில் விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க சிறப்பு கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கடலோர காவல்படை கப்பல் அபீக் இந்திரா என்ற படகில் தத்தளித்த 10 மீனவர்களை காப்பாற்றி புதுச்சேரி துறைமுகத்தில் இறக்கிவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications