'மிஷன் மதுக்கரை மகராஜ்' சக்சஸ்..... அட்டகாசம் செய்த ஒற்றை யானை பிடிபட்டது
கோவை: கோவை, மதுக்கரையில் அட்டகாசம் செய்துவந்த ஒற்றை யானை, மயக்க ஊசி மூலம் பிடிபட்டது. கும்கி யானை உதவியுடன் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டதால், மதுக்கரை அருகே அந்த காட்டு யானையை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். "மிஷன் மதுக்கரை மகராஜ்' திட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. யானை பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒராண்டிற்கும் மேலாக 18 வயதுடைய ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி வருகிறது. இந்த யானை அடிக்கடி விவசாய நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்த ஒற்றை யானையைப் பிடிக்க, "மிஷன் மதுக்கரை மகராஜ்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த யானையை பிடிக்க 4 கும்கி யானைகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஒற்றை யானையுடன் 6 யானைகள் இணைந்து உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினருக்கு கும்கி யானைகள் மூலம் ஒற்றை யானையை பிடிப்பதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது. பத்து நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் ஒற்றை யானையை பிடித்து ஆபரேசனை வெற்றிகரமாக முடித்துள்ளனர் வனத்துறையினர்.
விளை நிலங்கள் சேதம்
கோவை மதுக்கரை பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை ஆண் யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தியதுடன், பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஒற்றை யானையால் கடுமையாக தாக்கப்பட்டு வனத்துறை ஊழியர் ஒருவர் பலியானார்.
மிஷன் மதுக்கரை மகராஜ்
ஒற்றை யானையை பிடிக்க ‘மிஷன் மதுக்கரை மகராஜ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆபரேஷனில் வனத் துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், வேட்டை தடுப்புக் காவலர்கள், போலீ சார், வருவாய்துறையினர் என மொத்தம் 100 பேர் ஈடுபட்டனர்.
வனத்தில் சிறப்பு பூஜை
ஒற்றை யானையை பிடிக்க ‘மிஷன் மதுக்கரை மகராஜ்' ஆபரேசன் நல்லப்படியாக நடக்க வேண்டும் என்று காட்டில் வனத்துறையினர் சிறப்பு பூஜை நடத்தினர். இதில் வனத்துறையினர், போலீசார், கால்நடை பராமரிப்பு துறையினர் கலந்து கொண்டனர். இதில் கும்கி யானைகளும் கலந்து கொண்டன.
4 கும்கி யானைகள்
ஒற்றையானையை பிடிக்கும் ஆபரேசன் பணியில் முதுமலையில் இருந்து விஜய், சாடிவயலில் இருந்து பாரி, சுஜய், டாப்சிலிப்பில் இருந்து கலீம் ஆகிய 4 கும்கி யானைகள் நவக்கரை முகாமுக்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இந்தநிலையில் அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை மேலும் சில யானைகளுடன் சுற்றி வருகிறது.
ஒன்று சேர்ந்த 7 யானைகள்
ஒற்றை யானை நேற்று 6 ஆண் யானைகளுடன் சுற்றி திரிந்து வருகிறது. மொத்தமாக 7 யானைகளாக உலா வருவதை வனத்துறையினர் பார்த்தனர். இதனால் ஒற்றை ஆண் யானையை மட்டும் தனியாக பிரித்துக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.
காட்டுக்குள் சஞ்சாரம்
நேற்று மதுக்கரை பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் ஒற்றை யானை, மற்றும் அதனுடன் இருந்த 6 யானைகளும் காட்டுக்குள்ளேயே இருந்தன. சமவெளி பகுதிக்கு வரவில்லை. இதனால் ஒற்றை யானையை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
ராணுவ முகாமில் யானை
ஒற்றை யானையை தனிமைப்படுத்தி சமவெளிப் பரப்புக்கு கொண்டு வந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். நேற்று காலை மதுக்கரை ராணுவ முகாம் அருகே காட்டு பகுதியில் வனத்துறையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
அதிகாலையில் பிடிபட்டது
இதனிடையே மதுக்கரை அருகே ஒற்றையானை மட்டும் தனிமையில் சுற்றி வருவதாக அதிகாலை 3 மணிக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், கும்கி யானை உதவியுடன் துப்பாக்கி மூலம் ஒற்றை யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
ஓடிய யானை
மயக்க ஊசி செலுத்திய பின்னரும் கட்டுப்படாமல் ராணுவ முகாம் பகுதிக்குள் நுழைந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு கும்கிகளுடன் சென்ற வனத்துறையினர், மயக்க நிலையில் நின்று கொண்டிருந்த யானையை பிடித்தனர். இந்த யானையை டாப் சிலிப் வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் நிம்மதி
கடந்த ஒரு ஆண்டு காலமாக மதுக்கரை சுற்றுவட்டார பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை யானை, பிடிபட்டதை அடுத்து சுற்று வட்டார பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். யானையை பிடிக்கும் ஆபரேசனில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தூக்கமின்றி ஈடுபட்டவர்களும் நிம்மதியுடன் வீடு திரும்புகின்றனர்.