கருணாநிதியை மிரட்டி, வற்புறுத்தி என்னை கட்சியை விட்டு விரட்டினர்.. அழகிரி
மதுரை: கருணாநிதியை மிரட்டி வற்புறுத்தி என்னை கட்சியை விட்டு விரட்டினர் என்று மு. க. அழகிரி தெரிவித்தார்.
அழகிரி கட்சி விதிகளை மீறியதாக கடந்த 2014-இல் கருணாநிதியால் நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் அக்கட்சியில் இணைவதற்கு எந்த முனைப்பையும் காட்டவில்லை.
இந்நிலையில் திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவிற்கு பிறகு தன்னை கட்சியில் இணைத்து கொள்ளுமாறு மிரட்டியும் கெஞ்சியும் பார்த்தும் வேலைக்கு ஆகவில்லை.
கருணாநிதியுடன் சந்திப்பு
இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி சென்னையில் நடத்தப்பட்ட பேரணி குறித்து மு. க. அழகிரி ரிபப்ளிக் வேர்ல்டு என்ற ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு நானும் கருணாநிதியும் பேசினோம்.
நேரம் வரும்
அப்போது அவர் இந்த தேர்தல் முடிவடையட்டும் அது வரை பொறுமையாக இரு என்றார். எங்களுக்குள் நிறைய உரையாடல்கள் நிகழ்ந்தன. அதையெல்லாம் நான் இப்போது சொல்ல மாட்டேன். அவற்றை நேரம் வரும் போது தெரிவிப்பேன்.
சரியான தருணம்
கருணாநிதி இறப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னர் கூட நாங்கள் பேசிக் கொண்டோம். ஆனால் அப்போது அரசியல் குறித்தோ கட்சி குறித்தோ நாங்கள் பேசவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கட்சி குறித்து பேசுவதற்கு இது சரியான தருணம் என நினைக்கவில்லை.
நீக்கிய பிறகு
அவர் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தபோது என்னை பொறுமை காக்குமாறும் கட்சியில் விரைவில் இணைத்து கொள்வேன் என்றும் இது தற்காலிக நீக்கம்தான் என்றும் என்னிடம் அவர் கூறினார். கட்சிக்கு எதிராக நான் இதுவரை எதையும் செய்ததில்லை. என்னை கட்சியிலிருந்து நீக்கிய பிறகு வைகோ, எச் ராஜா உள்ளிட்டோர் என்னை வந்து சந்தித்தனர்.
உடல்நிலை சரியில்லாத போது
அப்போது விருதுநகரில் வைகோ போட்டியிடுவதாக கூறினார். அதையடுத்து அவரை நான் விமான நிலையத்தில் பார்த்தேன். என்னை என் வீட்டில் வந்து அவராகவே பார்த்துவிட்டு சென்றார். வைகோ என்னை சந்தித்ததற்காக நீக்கியதாக கூறும் இவர்கள் இன்று அதே வைகோவுடன் இருக்கிறார்களே. அதே வைகோ ஸ்டாலினை முதல்வராக்குவேன் என சவால் விடுத்துள்ளார். கருணாநிதி உடல்நிலை சரியில்லாத போது அவரை மிரட்டி, பணிய வைத்து என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். இதுதான் உண்மை என்றார் அவர்.