ஸ்டாலின் சரியான தலைவராக இருந்திருந்தால் ஆர்.கே.நகரில் டெபாசிட் போயிருக்காது.. அழகிரி அட்டாக்
Recommended Video
மதுரை: ஸ்டாலின் சரியான தலைவராக இருந்திருந்தால் ஆர்.கே நகரில் திமுகவுக்கு டெபாசிட் போயிருக்காது என்று மு.க. அழகிரி குற்றம்சாட்டினார்.
4 ஆண்டுகள் வாய் திறக்காமல் இருந்த அழகிரி, கருணாநிதி மறைவுக்கு பின்னர் பிஸியாகிவிட்டார். திமுகவுக்கு பெரும் குடைச்சலை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் ரிபப்ளிக் வேர்ல்டு என்ற ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார்.
முத்துச்செல்வி
அவர் கூறுகையில் ஸ்டாலின் நல்ல தலைவரே அல்ல. அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட்டை இழந்திருக்காது. தொண்டர்களே ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆர் கே நகரில் நடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற திமுக பெண் வேட்பாளர் சிம்லா முத்துச்செல்வி தோற்றாலும் 57 ஆயிரம் வாக்குகளை பெற்றார்.
வாக்கு வங்கி
ஆனால் தற்போது டெபாசிட் இழந்துள்ளது என்றால் அந்த வோட்டுகள் எல்லாம் எங்கு சென்றது. தற்போது திமுக பொருளாளராக உள்ள துரைமுருகனிடம் கட்சியின் வாக்கு வங்கிக்கு என்னவாயிற்று என கேட்டால் கட்சி தொண்டர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்குகளை விழுங்கி விட்டனர் என்றார். அவரை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை.
கட்சியில் எதிர்பார்ப்பு இல்லை
எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. கட்சியை அண்ணா துரை உருவாக்கினார். என் தந்தை அதை பாதுகாத்தார். அவர்கள் செய்த பணியை நான் செய்ய விரும்புகிறேன். இதை தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.
எதையும் கேட்டதில்லை
என் தந்தை உயிருடன் இருந்த போது கூட நான் எந்த வித பதவியையும் எதிர்பார்க்கவில்லை. எனது சிறப்பான பணிகளை பார்த்துவிட்டு அவராகவே எனக்கு பதவிகளை அள்ளித் தந்தார். நான் அவரிடம் இதுவரை எதையும் கேட்டதில்லை என்றார் அவர்.