படுத்து உருண்டாலும் குட்டிகரணம் போட்டாலும் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது: ஸ்டாலின்
என்னதான் பணம் கொடுத்து சாலையில் படுத்து உருண்டாலும் அதிமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: ஆர்கே நகரில் என்னதான் பணம் கொடுத்து சாலையில் படுத்து உருண்டாலும், குட்டிக் கரணம் போட்டாலும் அதிமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக ஆளும்கட்சியினர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சியினருடன் சிறப்பு தேர்தல் அதிகாரி பத்ரா ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், திமுக சார்பாக 20க்கும் மேலான புகார்கள் கொடுத்துள்ளோம்.
ஒரே நாளில் அதிமுக, தினகரன் தரப்பில் ரூ100 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
ரூ2 கோடி வைத்திருந்த அதிமுகவினரை பிடித்தால் சில ஆயிரம்தானே என்று போலீஸார் கூறுகின்றனர்.
பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையமும் காவல் துறையும் எந்த புகாரை கொடுத்தாலும் அலட்சியம் காட்டுகின்றனர். அதிமுகவும், தினகரன் தரப்பும் சேர்ந்து ஜனநாயகத்தையே கேலிகூத்தாகுகின்றனர்.
ஆர்கே நகரில் போலீஸ் கண்டும் காணமால் உள்ளது. படுத்து உருண்டாலும் குட்டிகரணம் போட்டாலும் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என்றார் ஸ்டாலின்.