உங்கள் சகோதரனாக கேட்கிறேன்... கலைந்து செல்லுங்கள்... ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: ராஜாஜி அரங்கத்தை விட்டு தொண்டர்கள் கலைந்து சென்றால்தான் கருணாநிதியின் ஊர்வலம் அமைதியாக நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதி ஊர்வலம் புறப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.
இதனிடையே தொண்டர்கள் தடுப்புகளை தாண்டி கருணாநிதியின் உடல் அருகே செல்வதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். இந்நிலையில் போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
இதையடுத்து ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்
தொண்டர்கள் கலைந்து சென்றால்தான் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அமைதியாக நடைபெறும்.
உங்கள் சகோதரனாக கேட்கிறேன். தயவு செய்து கலைந்து செல்லுங்கள். தொண்டர்கள் சுவர் ஏறி குதித்து வருவதை தவிர்க்க வேண்டும்.
மெரினாவில் இடம் ஒதுக்க கோரிக்கை விடுத்தபோது முதல்வர் செவி சாய்க்கவில்லை. இட ஒதுக்கீட்டுக்கு போராடிய கருணாநிதி இடஒதுக்கீட்டிலும் வெற்றி பெற்றார் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.