பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் மு.க. ஸ்டாலின்
சென்னை: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் வென்ற நிதிஷ்குமார் வரும் 20-ந் தேதி பாட்னாவில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இப்பதவியேற்பு விழாவுக்கு வருமாறு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்து நிதிஷ்குமாருக்கு கருணாநிதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், என்னுடைய மனைவி தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகையால் என்னுடைய மகனும் தி.மு.க. பொருளாளரும் முன்னாள் தமிழக துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின் பாட்னாவில் நடைபெறும் தங்களது பதவியேற்பு விழாவில் என் சார்பாக கலந்து கொள்வார் எனத் தெரிவித்துள்ளார்.