அவதூறு வழக்கு.. திண்டுக்கல் கோர்ட்டில் நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு விலக்கு
மதுரை: அவதூறு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக மு.க.ஸ்டாலினுக்கு விலக்கு அளித்து மதுரை ஹைகோர்ட் இன்று உத்தரவிட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு திண்டுக்கல்லில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறி மு.க.ஸ்டாலினை அவதூறு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முதன்மை அரசு வக்கீல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், வருகிற 8-ந்தேதி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தற்போது சட்டமன்ற கூட்ட தொடர் நடந்து வருவதால் என்னால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலாது. எனவே திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மு.க.ஸ்டாலின் தரப்பில் வக்கீல்கள் ரவி, மாணிக்கம் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 8-ந்தேதி திண்டுக்கல் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.