முக ஸ்டாலின் இன்று இரவு லண்டன் பயணம்
திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் இன்று இரவு லண்டனுக்கு செல்கிறார்.
சென்னை: தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் இன்று இரவு ஒரு வார பயணமாக லண்டன் செல்கிறார்.
முக ஸ்டாலின் 6 மாதங்களுக்கு ஒரு முறை தன் குடும்பத்தினருடன் வெளிநாடு பயணம் மேற்கொள்வது வழக்கம். கடந்த மாதம் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் சட்டசபை கூட்டத் தொடருக்காக தனது பயணத்தை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் முரசொலியின் பவள விழா பொதுக் கூட்டம் முடிவடைந்த மறுநாள் லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் நேற்று நடைபெறுவதாக இருந்த முரசொலி பவள விழா பொதுக் கூட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
எனவே ஸ்டாலின் இன்றைய பயணம் கேள்விக்குறியாக இருந்த நிலையில் முரசொலி பவள விழா பொதுக் கூட்டத்தை அவர் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டார். இதனால் அவர் திட்டமிட்டபடி இன்று இரவு லண்டன் செல்வார் என்றும், அவருடன் மருமகன் சபரீஷும் செல்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வாரம் கழித்து சென்னை திரும்பியவுடன் அதிமுக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் பணிகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.