மனைவியின் மறைவுக்கு பிறகு முத்துக்காளை வெளியிட்ட வீடியோ... பார்ப்போரை கலங்க வைத்த "நன்றி” பதிவு!
சென்னை: நடிகர் முத்துக்காளையின் குடும்பத்தில் சமீபத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, தனது மனைவியின் உடல்நிலை குறித்து கண்கலங்கியபடி வீடியோ வெளியிட்ட முத்துக்காளை, தற்போது மனைவியின் மறைவுக்குப் பிறகு நன்றி தெரிவித்து மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டிருப்பது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

நடிகர் முத்துக்காளை வீடியோ
சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில், தனது மனைவி கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக முத்துக்காளை உருக்கமாக தெரிவித்திருந்தார். அவரது மனைவிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும், அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகும் பழைய நிலைக்கு அவர் திரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் இருப்பதால், அதற்கான உதவியை தமிழக முதலமைச்சர் விஜயிடம் வேண்டுகோள் வைத்து அவர் பேசியிருந்தார்.
முதல்வர் விஜய் ஆக்ஷன்
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. முத்துக்காளையின் கண்ணீர் கலந்த வேண்டுகோள் பலரது மனதையும் உருக்கியது. இந்த விவகாரம் பெரும் கவனத்தை பெற்றதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் விஜய் நேரடியாக தலையிட்டு, முத்துக்காளையின் மனைவிக்கு தேவையான மேல் சிகிச்சைகள் விரைவாக அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முத்துக்காளையிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதாகவும், நிலைமையை கேட்டறிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதேபோல் அமைச்சர் ராஜ்மோகனும் நேரில் சென்று முத்துக்காளையை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அரசியல் மற்றும் நிர்வாக தரப்பிலிருந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதால், முத்துக்காளையின் குடும்பத்துக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.
எதிர்பாராத சம்பவம்
ஆனால் அனைவரும் நல்ல செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராத சோகம் நடந்தது. தீவிர சிகிச்சைகள் தொடர்ந்து நடந்த போதிலும், முத்துக்காளையின் மனைவி உயிரிழந்தார். இந்த செய்தி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இறுதிச்சடங்கின் போது மனைவியின் உடலருகே முத்துக்காளை கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்போரை கலங்க வைத்தன.
நன்றி தெரிவித்த முத்துக்காளை
இந்த நிலையில், மனைவியின் மறைவுக்குப் பிறகு முத்துக்காளை வெளியிட்டுள்ள புதிய வீடியோ தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அவர், "என்னுடைய மனைவி இறந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த நேரத்தில் நான் வீடியோ வெளியிட காரணம், என்னுடைய மனைவிக்காக நான் ஒரு வீடியோ வெளியிட்டேன். அதை பார்த்ததும் முதலமைச்சர் உடனே ஆக்சன் எடுத்தார். அவருக்கு ரொம்ப நன்றி.
தீவிரமான சிகிச்சைகள் நடந்த பிறகும் என்னுடைய மனைவி என்னை விட்டு பிரிந்தது துரதிஷ்டம்தான். ஆனாலும் எனக்கு கஷ்டம் என்றதும் ஆதவ் அர்ஜுனா பேசினார், ராஜ்மோகன் நேரில் வந்து ஆறுதல் சொன்னார். அவர்களுக்கும் ரொம்ப நன்றி" என்று உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் முத்துக்காளைக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். "இழப்பை எந்த உதவியும் ஈடு செய்ய முடியாது; ஆனால் கஷ்ட நேரத்தில் உடனடியாக கைகொடுத்தவர்களுக்கு நன்றி சொல்வது முத்துக்காளையின் மனப்பெருமையை காட்டுகிறது" என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பக்கம் மனைவியை காப்பாற்ற போராடிய கணவன், மறுபக்கம் உதவிக்காக குரல் கொடுத்ததும் உடனே நடவடிக்கை எடுத்த நிர்வாகம், இறுதியில் எல்லா முயற்சிகளையும் மீறி நேர்ந்த சோகம்... இந்த சம்பவம் பலரையும் மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது.













Click it and Unblock the Notifications