கரூரில் 41 குடும்பங்களுக்கு என்ன அரசு வேலை தெரியுமா? வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேறு உதவி?
கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி த.வெ.க. கட்சியின் பிரசார கூட்டம் நடந்தது. அப்போது நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இறந்த 42 பேரின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம் அரசு பணியை பெற வாய்ப்பில்லாதவருக்கு வேறு என்னென்ன உதவிகளை வழங்கலாம் என்று தமிழக அரசு ஆலோசித்து வருவதாகவும் தற்போது
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், காங்கிரஸ், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. விஜய் தேர்தலுக்கு முன்பு பிரச்சாரத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வந்தார். அந்த வகையில் கரூருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி சென்றார். அங்குள்ள வேலுசாமியபுரத்தில் பிரசாரம் செய்தபோது அதிகளவு கூட்டம் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 18 பேர் பெண்கள், 13 பேர் ஆண்கள், 10 பேர் குழந்தைகளாவார்கள். சிலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவரும்.

அப்போது இன்று முதல்வராக உள்ள தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதுல் தெரிவிக்கவில்லை.. அதேநேரம் அன்றைய தினம் தி.மு.க. தலைவரும், அன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் சம்பவ இடத்திற்கு உடனே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதனிடையே விஜய் கரூர் செல்லாதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களை நேரில் போய் பார்க்காமல், அவர்களை மகாபலிபுரத்திற்கு அழைத்து வந்து ஆறுதுல் கூறினார். அத்துடன் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த சூழலில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவிகளை செய்ய முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளை முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வருகிற 10-ந் தேதி கரூருக்கு முதல்வர் விஜய் செல்ல உள்ளார். அப்போது 41 பேரின் வீட்டுக்கும் நேரடியாக சென்று அந்த குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
அரசு வேலை தருவதற்காக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அரசு அதிகாரிகள் தொடர்பு கொண்டு தாலுகா அலுவலகத்திற்கு சென்று பணி ஆணை கொடுப்பதற்காக அவர்களது விவரங்களை எழுதி அனுப்புமாறு கூறினார்களாம். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த பழனியம்மாள், கோகிலா ஆகியோரின் தந்தை பெருமாள், உயிரிழந்த தரணிகாவின் தந்தை சக்திவேல் உள்ளிட்டோர் கரூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்று தங்களது விவரங்களை எழுதி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இணைக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கரூருக்கு வரும் 10-ந் தேதி முதல்-அமைச்சர் விஜய் செல்ல உள்ளார். அப்போது அவர்களுக்கான உதவிகளை நேரில் சென்று வழங்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் வாரிசுதாரருக்கு அரசு வேலை (அரசு துறைகளில் இளநிலை உதவியாளர் பதவி) வழங்கப்பட உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இதற்காக வாரிசுதாரர்களின் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அரசு பெற்றுள்ளது. சில குடும்பங்களில் அரசு வேலையை ஏற்க முடியாத நிலையில் உள்ளார்களாம். எனவே அவர்களுக்கு மாற்றாக நிலம் உள்ளிட்ட வேறு உதவிகளை வழங்கலாமா? என்று திட்டமிடப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த வகையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரின் வாரிசாக யார்-யாருக்கு என்னென்ன உதவிகளை வழங்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் பட்டியலிட்டு வருகிறார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்திருந்தாலும், அந்த குடும்பத்திற்கு ஒரு உதவியை மட்டுமே வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வரும் 10-ந் தேதி அரசு வேலைக்கான பணி ஆணை அல்லது வேறு உதவிக்கான சான்றிதழ்களை முதல்வர் விஜய் வழங்குவார் என்றே சொல்கிறார்கள்.














Click it and Unblock the Notifications