"தவெக ஆட்சி 6 மாதத்திற்கு மேல் இருக்காது - இருக்கவும் விடமாட்டோம்" - அனிதா ராதாகிருஷ்ணன் சவால்
தூத்துக்குடி: ''இந்த ஆட்சி ரொம்ப நாள் நீடிக்காது. அதிகபட்சம் 6 மாதம் தான் இந்த ஆட்சி இருக்கும். நான் சவால் விட்டு சொல்கிறேன். நான் இருக்கும் திருச்செந்தூரில் அமைந்து இருக்கும் சுப்பிரமணியசுவாமி மீது சத்தியமாக சொல்கிறேன் இந்த ஆட்சி 6 மாதத்துக்கு மேல் இருக்காது. இருக்கவும் விடமாட்டோம்'' என்று இன்று கைதாகி உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார்.
முதல்வர் விஜய் பற்றி அவதூறான கருத்துகளை பொது மேடையில் பேசியதாக கூறி திருச்செந்தூர் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இன்று கைது செய்யப்பட்டார். தூத்துக்கு மாவட்டம் ஆத்தூர் போலீசார் அவரை கைது செய்தனர்.

அதன்பிறகு தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் வைத்து 6 மணிநேரம் விசாரித்தனர். மாலை 6 மணிக்கு எஸ்பி அலுவலகத்தில் இருந்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். இந்த வேளையில் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
''திமுகவை மிரட்டி பயம் காட்டலாம் என்று நினைக்கிறார்கள். என்னிடம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்து கொள்ளுங்கள். அதற்கு சப்போர்ட் செய்வோம் என்று சொன்னார்கள். நாங்கள் வந்து எதற்கும் பயப்படமாட்டோம். இன்று வந்த கட்சிக்கு நாங்கள் பயப்பட வேண்டுமா? எங்களின் கட்சி தலைவர் தைரியமாக இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். அந்த தைரியத்தில் எதை வேண்டுமானாலும் சந்திக்க தயார்.
குதிரை இல்லை. ஒட்டக பேரம் பேசினார்கள். அது நடக்காது. நான் முதல் போட்டு முதலமைச்சராக இல்லை. நான் என்னுடைய கட்சியின் தலைவர் ஸ்டாலினின் எண்ணங்களை நிறைவேற்றும் தொண்டனாக இருக்கிறேன். எதற்கும் அச்சப்படமாட்டேன். 'ஏ' நோட்டீஸ் எனக்கு கொடுத்தார்கள். அதனை என்னுடைய வழக்கறிஞர் வாங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் என்பதால் சென்னையில் இருப்பதால் 10ம் தேதி வந்து போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று சொன்னார்கள். ஆனால், அதற்கு முன்பாக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினோம். அங்கு தீர்ப்பு வந்தது. அது வந்தவுடன் என்னை கைது செய்து உள்ளே அனுப்பிவிட வேண்டும். பயம்காட்ட வேண்டும் என்று செய்கிறார்கள். இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம்.
இந்த ஆட்சி ரொம்ப நாள் நீடிக்காது. அதிகபட்சம் 6 மாதம் தான் இந்த ஆட்சி இருக்கும். நான் சவால் விட்டு சொல்கிறேன். நான் இருக்கும் திருச்செந்தூரில் அமைந்து இருக்கும் சுப்பிரமணியசுவாமி மீது சத்தியமாக சொல்கிறேன் இந்த ஆட்சி 6 மாதத்துக்கு மேல் இருக்காது. இருக்கவும் விடமாட்டோம்'' என்று ஆக்ரோஷமாக கூறினார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர்கள் காவல்துறை தாக்கினார்களா? என்ற கேள்வியை முன்வைத்தனர். அதற்கு அனிதா ராதாகிருஷ்ணன், ''என்னை தாக்கவில்லை. ஆனால் மிரட்டுகிறார்கள். என்னை தாக்கினால் நானும் திரும்ப தாக்குவேன்'' என்று கொந்தளித்தார்.












Click it and Unblock the Notifications