ஒரே நேரத்தில் இன்று 41 இடங்களில் அலற விட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.. சிக்கியது ரூ.58 லட்சம்!
சென்னை: தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் என மொத்தம் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று நடத்திய திடீர் சோதனையில் ரூ.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சுமார் ரூ.8 லட்சம், திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ.5.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களை குறிவைத்து தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் நகராட்சி நிர்வாக துறையின் கீழ் செயல்படும் மாநகராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் என 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெள்ளிக்கிழமையான இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தவெக அரசு அமைந்த உடன் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர் அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சார் பதிவாளர்கள் அலுவலகங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் உள்ள பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் தமிழ்நாட்டில் அதிக பண பரிவர்த்தனை நடைபெறும் துறைகள், மக்கள் சேவைகள் அதிகம் உள்ள துறைகள், ஆகிய அலுவலகங்களில் தொடர்ச்சியாக லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் கடந்த காலங்களில் இதேபோன்று பண்டிகை நேரங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவது வழக்கம்.
தற்போது தொடர்ச்சியாக புகார்களின் அடிப்படையில் மக்கள் சேவைகள் அதிகம் உள்ள துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் தமிழ்நாடு முழுவதும் இன்று 41 மாநகராட்சி, நகராட்சி மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையை மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல் தூத்துக்குடி, நெல்லை, தாம்பரம், புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திருப்பத்தூர், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனை நடந்த அனைத்து மண்டல அலுவலக வாயிற்கதவுகள் மூடப்பட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று நடத்திய திடீர் சோதனைகளில் ரூ.57.98 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சுமார் ரூ.8 லட்சம், திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ.5.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில் இன்று நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.31,27,110 கைப்பற்றப்பட்டது. மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் GPay பரிவர்த்தனைகள் ரூ.26,70,990 கண்டறியப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.














Click it and Unblock the Notifications