இன்றும் நாளையும் ஆசிரியர் தகுதி தேர்வு.. ஆசிரியர்கள் அறிய வேண்டியவை.. டிஆர்பி முக்கிய அறிவிப்பு
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வினை அறிவித்திருந்தது. இன்றும் நாளையும் தேர்வும் நடைபெறுகிறது. தாள்-1 க்கு 222 மையங்களில் 61,386 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். நாளை ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-II க்கு 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுத உள்ள ஆசிரியர்களுக்கு விரிவான வழிகாட்டுதல்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதில் தாள் ஒன்று என்பது 1 முதல் 5-ம் வகுப்பு வரை (இடைநிலை ஆசிரியர்) கற்பிக்க விரும்புபவர்களுக்கானது.தாள் II (Paper II): 6 முதல் 8-ம் வகுப்பு வரை (பட்டதாரி ஆசிரியர்) கற்பிக்க விரும்புபவர்களுக்கானது ஆகும்
கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2011ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பிற விதிகளை பின்பற்றி நியமிக்கப்படுகிறார்க. 2011ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்ற நிலை தான் இருந்து வந்தது.

ஆனால், அவர்களுக்கு தகுதித் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2011ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் 2028ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தீர்ப்பளித்தது. இதன்படியே தற்போது சிறப்பு தேர்வுகள் ஆசிரியகளுக்காக நடத்தப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் 01/2026 நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I 04.07.2026 அன்றும், தாள்-II 05.07.2026 அன்றும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.
தாள்-1 க்கு 222 மையங்களில் 61,386 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் ஆண் தேர்வர்கள் 12,001, பெண் தேர்வர்கள் 49,385 ஆகும். இதில் 1,321 தேர்வர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்கள். இம்மாற்றுத்திறனாளிகளில் 126 மாற்று திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தாள்-II க்கு 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் ஆண் தேர்வர்கள் 40,535, பெண் தேர்வர்கள் 1,27,208 ஆகும். இதில் 3,151 தேர்வர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்கள். இம்மாற்றுத்திறனாளிகளில் 601 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இத்தேர்வுகளை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் நிலையில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நாளன்று தேர்வர்கள் சார்ந்த தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வருகை புரிய வேண்டும். காலை 9.30 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications