எ.வ.வேலு மருத்துவமனையில் அனுமதி.. விசாரணைக்கு ஆஜராகாமல் சிங்கப்பூர் பறந்தார்!
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு இன்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜராகாத நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2021 முதல் 2026 வரை நடந்து முடிந்த திமுக ஆட்சியில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தார் எ.வ.வேலு. தற்போது, திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது, நெடுஞ்சாலைத் துறையில், சாலை அமைக்காமலேயே அரசின் பணம் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக, அறப்போர் இயக்கம் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அலுவலகத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு புகார் அளித்தது. அதன் அடிப்படையில் கரூரில், சாலையே போடாமல், 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 25 ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை லாப்தி காலனியில் உள்ள எ.வ.வேலு வீடு உட்பட நான்கு இடங்களிலும், கரூரில் 7, திண்டுக்கல்லில் 2, கோவையில் 2, திருப்பூரில் ஒன்று என 20 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். முடிவில், 40 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சம்மன் அனுப்பியிருந்த சூழலில், உடல்நிலையை காரணம் காட்டி அவர் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை. எ.வ.வேலு சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிகிச்சை பெறுவதாக தெரிவித்துள்ளார்.
சிகிச்சை முடிந்து சென்னை வந்ததும் விசாரணைக்கு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவதாக எ.வ.வேலுவின் வழக்கறிஞர் தாக்கல் செய்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எ.வ.வேலு இருதய தொடர் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications