“ஆளுநரே நேரில் சென்று.. வைகை ஆற்றை தூர்வாருவாரா?” நறுக் கேள்வி எழுப்பிய அமைச்சர் நிர்மல் குமார்!
சென்னை: வைகை ஆறு விஷயத்தில் ஆளுநர் மாளிகை நேரடியாக இயங்கும் என்று ஆளுநர் அர்லேக்கர் கூறியிருந்தது விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில், ஆளுநரே நேரில் சென்று வைகை ஆற்றை தூர்வாருவாரா? என்று அமைச்சர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஆளுநரின் நடவடிக்கையை முன்னதாக கண்டித்திருந்த அமைச்சர் நிர்மல்குமார், "ஆளுநர் மாளிகைக்குள் உள்ள வேலையை அவர் பார்த்தால் போதும்" என்றும் விமர்சித்திருக்கிறார்.

மேலும் அவர் பேசுகையில், "ஆளுநர் எப்படி வைகை ஆற்றை சுத்தம் செய்வார்? ஆளுநருக்கு என ஒரு அதிகாரம் இருக்கிறது. அந்த வேலையில் மட்டும் அவர் தலையிட்டால் போதுமானது. துர்வார வைகைக்கு போவதாக சொல்கிறாரே! எப்படி போவார்? அவர் யாருக்காவது கான்டிராக்ட் விடுவாரா? இல்லை அவரே 10 லாரிகளை எடுத்துக்கொண்டு போவாரா? தேவையில்லாமல் குழப்பம் விளைவிக்கும் எந்த வேலையையும் அவர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வைகை ஆறு விஷயத்தில் அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இயந்திரத்திற்குள் தலையிடும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. அரசின் உத்தரவு இல்லாமல் அரசு அதிகாரிகள் ஆளுநருடன் ஆய்வில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
என்ன பிரச்சனை?
நேற்று மதுரை சென்றிருந்த ஆளுநர் அர்லேக்கர் சௌராஷ்டிரா கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றிருந்தார். அங்கு மாணவர்களிடம் உரையாற்றி அவர்,
"துப்பாக்கியை தூக்கிக்கொண்டு சண்டைக்கு போவது மட்டும் நாட்டுப்பற்று கிடையாது. நதிகளை பாதுகாப்பதும் தேசப்பற்றுதான். இளைஞர்கள் வைகை ஆற்றை காப்பாற்ற களமிறங்க வேண்டும். நான் வைகை ஆற்றை பார்த்தேன். ஆறு இருக்கிறது. ஆனால் தண்ணீர் இல்லை. எனவே இதனை சரி செய்யாவிட்டால் ஆளுநர் மாளிகையே நேரடியாக களத்தில் இறங்கும்" என்று பேசியிருந்தார்.
பேசியதோடு நிற்காமல், ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகர ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தியிருக்கிறார். ஆளுநர் எப்படி ஆய்வு கூட்டத்தை நடத்தலாம்? என்று எதிர்க்கட்சிகள் மற்றும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்த விசிக, இடதுசாரிகள் கொந்தளித்திருந்தன. இதையடுத்து தற்போது அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.









Click it and Unblock the Notifications