கோவையில் அமைச்சர் கீர்த்தனா தந்த முதலீட்டு சூப்பர் அப்டேட்! இனி தமிழக இளைஞர்கள் "அங்கே" போக வேண்டாமா
கோவை: கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தென்னிந்திய மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, 'CII SPRINT 2030' திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசு மேற்கொள்ளும் புதிய தொழில் முதலீடு நடவடிக்கைகள் பற்றியும், உள்ளூர் இளைஞர்களுக்கான உயர்தர வேலைவாய்ப்புகள் குறித்த அரசின் திட்டங்களை பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தென்னிந்திய மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமை தாங்கினார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த சிஐஐ நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
கோவை அமைச்சர் கீர்த்தனா
தென் மாநிலங்களில் தொழில் வளர்ச்சியை வளர்ப்பது, தொழிற்சாலைகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பை மாற்றுவது மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவை அதிகரிப்பது பற்றியெல்லாம் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தெற்கு மாநிலங்களின் இப்போதுள்ள தொழில் நிலை குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நிர்வாகிகள் இதில் விவாதித்தனர்.. பிறகு 'CII SPRINT 2030' என்ற புதிய திட்டத்தையும் துவக்கி வைத்தனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, கோவை மாவட்ட தொழில் வளர்ச்சியையும், அரசின் திட்டங்களை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
முதலீட்டு சூப்பர் அப்டேட்
"கோவையின் மிக முக்கியத் தேவையாக இருப்பது விமான நிலைய விரிவாக்கம் தான்.. இதற்காக நிலம் எடுக்கும் பணிகள் இப்போது வேகமாக நடந்து வருகின்றன. உள்ளூர் தொழில்துறையினரின் தேவைகளைக் கேட்டுச் செயல்பட சிஐஐ மற்றும் கைடன்ஸ் அமைப்பின் சார்பில் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுப் பணிகள் நடக்கின்றன.
தமிழ்நாட்டில் தரைமட்டப் பணிகள் மட்டுமே அதிகமாக இருப்பதால், இனிவரும் காலங்களில் நம் தமிழக இளைஞர்களுக்கு அதிகமாக சம்பளம் கிடைக்கும் உயர்தர வேலைகளை உருவாக்குவதே அரசின் நோக்கம். இதற்காகத் துறை வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன
. புதிய முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு வருவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாகவே, உள்ளூர் கல்லூரிகளுடன் அரசு ஒப்பந்தம் செய்ய போகிறது.. இதன் மூலம் அந்தந்த துறை சார்ந்த பயிற்சிகளை முன்கூட்டியே வழங்கி, இளைஞர்களை வேலைக்கு தயார்படுத்தும் திட்டங்களையும் நம்முடைய அரசு செய்து வருகிறது.
புதிய திட்டங்கள், பாரம்பரிய தொழில்கள்
பாரம்பரிய தொழில்களையும், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களையும் (MSME) மேம்படுத்தக் கைடன்ஸ் அமைப்போடு இணைந்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான புதிய திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. தொழில்துறைக்கு மின்சாரம் மிக முக்கியம் என்பதால், நாம் பசுமை ஆற்றல் முறையை நோக்கி நகர வேண்டும்..
தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கும் நிலங்கள் எங்கெங்கே உள்ளது என்பதை கண்டறிந்து, அங்கு சோலார் பேனல்கள் அமைத்தால் தொழில்துறைக்கு மின்சாரம் கிடைக்கும். இதுகுறித்த ஆய்வுகளையும் அரசு செய்து வருகிறது. கோவை பகுதி சிறு தொழிலதிபர்களை இனிமேல்தான் நேரில் சந்திக்க போகிறேன்..
முதலீடுகளுக்கு லஞ்சம் ?
முந்தைய ஆட்சியில் முதலீடுகளுக்கு லஞ்சம் கேட்கப்பட்டதாக, நான் வெளியிட்ட எக்ஸ் பதிவு உண்மையானதுதான்.. தன்னுடைய பதிவிலேயே தொழில் அதிபர் ஒருவர் முன்வந்து, முந்தைய ஆட்சியில் லஞ்சம் கேட்கப்பட்டதை ஒப்புக்கொண்டு எழுதியிருந்தார்.. கடந்த 40 நாட்களில் மட்டும் ஹூண்டாய், ஹியூசாங் உள்ளிட்ட 3 முக்கிய நிறுவனங்களை நேரில் சென்று பார்த்துள்ளேன்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், சுமார் 25 விழுக்காடு திட்டங்கள் வெறும் பேச்சளவில் நின்றுவிட்டன. இப்படி காகிதத்தில் மட்டுமே கையெழுத்திடுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை.. கையெழுத்தாகும் ஒப்பந்தங்களை 100 விழுக்காடு முழுமையாக, தொழிற்சாலைகளாக மாற்றுவதே எங்களின் இலக்கு.
கோவைக்கு முதல் முறை
நம்முடைய இளைஞர்கள் வேலை தேடி பெங்களூருக்கோ, ஹைதராபாத்திற்கோ செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது. சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களிலேயே உயர்தர வேலைகளை உருவாக்குவோம். மத்திய அரசின் ஒத்துழைப்போடுதான் மாநில அரசு செயல்படுகிறது என்பதால் தமிழ்நாட்டிற்குத் தேவையான திட்டங்கள் நடக்கும்..
கோவைக்கு செய்தியாளர்களைச் சந்திக்கத் தான் வருவது இதுவே முதல் முறை... இனி அடிக்கடி கோவைக்கு வர வேண்டி இருப்பதால், செய்தியாளர்களைத் தொடர்ந்து சந்திப்பேன்" என்றார் அமைச்சர் கீர்த்தனா.












Click it and Unblock the Notifications