அனிதா ராதாகிருஷ்ணன் கையுடன் தனது கையை போட்டு லாக்.. இறுக்கமாக பிடித்து அழைத்து சென்ற போலீஸ்!
தூத்துக்குடி: திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்யும் போது, காவல்துறை அதிகாரி தனது கையுடன் சேர்த்து அனிதா ராதாகிருஷ்ணனின் கையை லாக் செய்து போலீஸ் ஜீப்பில் ஏற்றிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதனால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து, அங்கிருந்த போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய போது, முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து ஆத்தூர் காவல் நிலையத்தில் தவெக நிர்வாகிகள் அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் அளித்தனர்.

இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அனிதா ராதாகிருஷ்ணன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த மனு தள்ளுபடியான 90 நிமிடங்களில் போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ளனர்.
ஆத்தூர் பேரூராட்சியில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்ய சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை திடீரென கைது செய்திருக்கின்றனர். கைது செய்ய வேண்டும் என்று போலீசார் கூறிய போது, என்னுடைய காரிலேயே வந்துவிடுகிறேன் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறார். ஆனால் போலீசார் போலீஸ் ஜீப்பில் ஏறுங்கள் என்று கெடுபிடி விதித்துள்ளனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த காரில் ஏறிய போதும் கூட அவரை அப்படியே கீழ் இறக்கி ஜீப்பை நோக்கி அழைத்து வந்துள்ளனர். அப்போது அனிதா ராதாகிருஷ்ணனின் கையுடன் தன்னுடைய கையை இணைத்து காவல் அதிகாரி லாக் செய்துள்ளார். இதனால் அங்கிருந்த திமுகவினர் கொந்தளித்து போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்ப தொடங்கினர்.
ஒரு எம்எல்ஏ-வுக்கான மரியாதை கூட போலீசார் கொடுக்க மறுப்பதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இதன்பின் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனால் தூத்துக்குடி மேயர் தலைமையில் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications