முதலமைச்சர் என்னவோ விஜய் தான்.. ஆனால் ஆக்டிங் முதல்வர் யார் தெரியுமா? தவெக பிளானை உடைத்த எழிலரசன்
சென்னை: அனிதா ராதாகிருஷ்ணன் விவகாரம் பற்றியெறிந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், திமுகவின் எழிலரசன் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.. தமிழகத்தில் குதிரைப் பேரத்தை முதலில் தொடங்கி வைத்ததே முதலமைச்சர் விஜய்தான். விஜய்யின் குதிரை பேரம் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பேசியுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் விஜய்தான், ஆனால் பின்னணியில் இருந்து இயக்கும் 'ஆக்டிங் முதலமைச்சர்' ஆதவ் அர்ஜுனாதான்" என்றெல்லாம் எழிலரசன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கடந்த ஜூன் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.. அதில் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அப்போது முதல்வர் விஜய் குறித்தும் பேசியிருந்தார்.. ஆனால் சர்ச்சையாக பேசியதாக தெரிகிறது.. இதனால் எரிச்சலடைந்த தவெக நகரச் செயலாளர் செல்வம், ஆத்தூர் காவல் நிலையத்தில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராகப் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை காரணம் காட்டி போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தார்கள்.
பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் சென்னை ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கலும் செய்யப்பட்டது.. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது 2 தரப்பிலும்வாதங்களும் முன்வைக்கப்பட்டன.
திமுக கண்டனம்
அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், இது வெறும் அவதூறு வழக்கு மட்டுமே என்பதால் போலீசாரின் வழக்குப் பதிவு சட்டப்படி செல்லாது என்றும், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 7 முறை எம்எல்ஏவாக இருந்த ஒருவர் பொறுப்புடன் பேசியிருக்க வேண்டும், இந்த வழக்கை பதிவு செய்யாமல் இருந்திருந்தால் 2 தரப்பினரும் மோதல் வரை போயிருக்கும் என்று பதில் வாதம் செய்தனர்.
2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "1967ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டை சினிமா துறையை சேர்ந்தவர்கள்தான் ஆட்சி செய்கிறார்கள், அவர்களை மக்களே வாக்களித்துத் தேர்ந்தெடுத்தனர். ஒரு எம்எல்ஏ சாதாரண குடிமகன் கிடையாது, அவர் ஏன் இப்படியெல்லாம் பேச வேண்டும்?" என்று கேள்வி எழுப்பி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். தீர்ப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே போலீசார் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்தனர்.
கொந்தளிக்கும் திமுக மூத்த தலைவர்கள்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, கைது செய்யப்பட்ட முதல் மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவார். இந்த கைதானது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், "தமிழ்நாட்டில் தற்போது மோசமான ஆட்சி நடக்கிறது; தவெக ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன" என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் எழிலரசன் ஆவேகமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
எழிலரசன் காட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எழிலரசன்,"தவெக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசைதிருப்பும் வகையில் தான் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அராஜகமான முறையில் காவல்துறை இழுத்துச் சென்றுள்ளது. முன்ஜாமீன் மறுக்கப்பட்ட ஒரே ஒரு மணி நேரத்திற்குள் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது எந்தப் புகாரும் இல்லாத நிலையிலும், அவரை எப்படியாவது கைது செய்ய தவெக அரசு முயற்சிக்கிறது. ஆனால், ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து ஏன் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போடுவது, அவதூறு பரப்புவது பற்றி மட்டும்தான் இந்த தவெக அரசு எப்போதும் யோசிக்கிறது
ஆக்டிங் முதலமைச்சர்
வரவிருக்கும் இடைத் தேர்தலில் எப்படியாவது ஜெயிப்பதற்காக இதுபோன்ற அத்துமீறல்களில் தவெக அரசு ஈடுபட்டு வருகிறது, திமுகவின் தேர்தல் பணிகளை முடக்கவே கைது என்ற பெயரில் இந்த சதித் திட்டம் தீட்டப்படுகிறது.
சட்டமன்றத்தில் பெரும்பான்மை வேண்டும் என்று ஆளுநர் கூறிய அந்த நாளிலேயே குதிரை பேரத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கிவிட்டார். ஆட்சி அமைப்பதற்கு முன்பு தொடங்கிய தவெகவின் குதிரைபேரம் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த குதிரைப் பேரத்தை முதலில் தொடங்கி வைத்ததே முதலமைச்சர் விஜய்தான். விஜய்யின் குதிரை பேரம் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பேசியுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் விஜய்தான், ஆனால் பின்னணியில் இருந்து இயக்கும் 'ஆக்டிங் முதலமைச்சர்' ஆதவ் அர்ஜுனாதான்" என்றெல்லாம் எழிலரசன் குற்றஞ்சாட்டி உள்ளார்.









Click it and Unblock the Notifications