இன்னும் சில மணி நேரத்தில் நல்ல செய்தி.. டெல்லியில் நின்றபடி அமெரிக்கா அதிரடி! கவனிக்கும் உலக நாடுகள்
வாஷிங்டன்: 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது இன்னும் சில மணி நேரங்களில் ஈரான் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக மிகப் பெரிய ஒரு நல்ல செய்தி வரவுள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பவர் மார்கோ ரூபியோ. இவர் இப்போது இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இதற்கிடையே டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இணைந்து ரூபியோ கூட்டுப் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார். 53 நிமிடங்கள் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் ரூபியோ பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஈரான் அமைதி ஒப்பந்தம்
குறிப்பாக ஈரான் அமைதி ஒப்பந்தம் தொடர்பான மிக முக்கியமான அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வரவுள்ளதாக அவர் அறிவித்தார். ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அதிபர் டொனால்ட் டிரம்ப் இதே கருத்தைக் கூறியிருந்த நிலையில், கிட்டத்தட்ட அதே கருத்தைத் தான் ரூபியோவு்ம இப்போது கூறியிருக்கிறார். இது இந்த இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக, உலக எரிசக்திப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக முடக்கியிருந்தது.
கச்சா எண்ணெய்
இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மார்கோ ரூபியோ பேசுகையில், "ஹார்முஸ் ஜலசந்தி என்பது ஒரு சர்வதேச நீர்வழிப் பாதை. ஆனால் ஈரான் என்ன செய்கிறது என்றால், சர்வதேசச் சட்டங்களுக்கு முற்றிலும் முரணான வகையில் அந்தப் பாதையைப் பயன்படுத்தும் வணிகக் கப்பல்களை அழிப்போம் என்று மிரட்டுகிறது. இது சட்டவிரோதமானது! தற்போது எட்டப்பட்டு வரும் அமைதி ஒப்பந்தம், இந்த ஹார்முஸ் முடக்கத்திற்கு ஒரு நிரந்தரத் தீர்வைத் தரும்!" என்றார்.
டிரம்ப்
அதேநேரம் டிரம்ப் இது தொடர்பாகப் போட்ட ட்ரூத் சோஷியல்ஸ் போஸ்டில் அணுசக்தி விவகாரம் குறித்துக் குறிப்பிடவில்லை. இதைக் குறிப்பிட்ட ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அதைத் தங்களின் ராஜதந்திர வெற்றி என்று கொண்டாடி, டிரம்பின் பதிவை வெறும் விளம்பரம் எனச் சாடியிருந்தது.
ஆனால், டெல்லியிலிருந்து அதற்குப் பதிலடி கொடுத்துள்ள ரூபியோ, "அமெரிக்காவின் இறுதி இலக்கு என்பது ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பது தான். இந்த ஒப்பந்தம் அணுஆயுதம் குறித்த பயமோ அல்லது கவலையோ உலக நாடுகளுக்கு இனி இல்லாதவாறு செய்யும். அதற்கான ஒரு ஆரம்பப் புள்ளி" என்று அவர் கூறினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தான் நடத்திய தொலைப்பேசி பேச்சுவார்த்தை மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்றும், 14 முக்கிய அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இறுதி வடிவங்கள் மட்டுமே ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் டிரம்ப் தனது டிரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியின் முழுக் கட்டுப்பாடு தங்களின் வசம் மட்டுமே நீடிக்கும் என்றும், கப்பல் போக்குவரத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வரச் சம்மதித்தது தடையற்ற போக்குவரத்திற்கான அனுமதி அல்ல என்றும் ஈரான் இன்னும் தனது பிடியைத் தளர்த்தாமல் முரண்டு பிடித்து வருகிறது. இதில் சிறு குழப்பம் இருந்தாலும் கூட இன்னும் சில மணி நேரங்களில் அமைதி ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வரும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications