தி.மு.க. மா.செ. தேர்தல்: ஆதரவாளரை வெல்ல வைக்க பகீரத முயற்சிகள் தோல்வி-அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்!
சென்னை: திமுக மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் தன்னுடைய ஆதரவாளர்களை கொண்டுவர அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் முயற்சித்தும் 'தொண்டர்கள்' செல்வாக்கில் பலரும் ஜெயித்துவிட இப்போது அவர் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.
திமுக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 30 மாவட்ட செயலாளர் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. மோதல், பஞ்சாயத்து என அரங்கேறிய சில அசம்பாவிதங்களுக்கு திமுக தலைமையே தீர்வு கண்டும் அனுப்பி வைத்தது. இதில் பல மாவட்ட செயலாளர் தேர்தலில் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தனது ஆதரவாளரை நிறுத்தியும் பார்த்திருக்கிறார். ஆனால் அப்படி ஸ்டாலின் ஆதரவுடன் போட்டிக்கு வந்த பலரும் தோற்றுப் போக அவருக்கு கடும் அதிர்ச்சி என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.

சென்னையில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர் தேர்தலில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்கு சுரேஷ்ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு எதிராக மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தியவர் 30 வயது தொழிலதிபர் செந்தில் முருகன். ஆனால் செந்தில் முருகனோ, மிக மிக நம்பிக்கையோடு தான் வெற்றி பெறுவோம் என்று நம்பியிருந்த நிலையில் கடைசி நேர 'மேலிட' கட்டளைகளால் தாம் கவிழ்க்கப்பட்டுவிட்டதாக நொந்து போயிருக்கிறார்.
கெட்ட ஆட்டம் போட்ட சுரேஷ்ராஜன்
அதே நேரத்தில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் தேர்தலோ களபேரத்துடன் ஒத்திவைக்கப்பட்டது. மேற்கு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் செந்தில்முருகனின் ஆதரவாளர் கை ஓங்கி இருந்ததாம். கிழக்கு மாவட்டத்தில் தான் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமது ஆதரவாளர் மனோ தங்கராஜை எப்படியும் வெல்ல வைத்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்த சுரேஷ்ராஜன், வேட்பாளர் கடத்தப்பட்டுவிட்டதாக ஒரு நாடகமாடினார்.
பின்னர் கருணாநிதியிடம் பஞ்சாயத்து போனது. கடைசியாக மனோதங்கராஜ்தான் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் என்று வழக்கத்துக்கு மாறாக கருணாநிதியே அறிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஸ்டாலினுக்கு செம ஷாக்
திருப்பூர் வடக்கில் முன்னாள் மேயர் செல்வராஜூக்கு செல்வாக்கு இருந்த போதும் ஸ்டாலின் ஆதரவுடன் வெள்ளக்கோவில் சாமிநாதன் நின்றும் பார்த்தார்.. பரிதாபம்தான் சாமிநாதனுக்கு கிடைத்தது.
நாகை வடக்கில் ஸ்டாலின் ஆதரவுடன் ஏ.கே.எஸ். விஜயன் தனது ஆதரவாளர் முருகனை களமிறக்க அவரை ஒரு கை பார்த்து மாவட்ட செயலாளர் பதவியை பிடித்தார் குத்தாலம் கல்யாணம்.
நாகை தெற்கில் கடுமையான எதிர்ப்புக்கு இடையே ஏ.கே.எஸ். விஜயன் வெல்ல வேண்டியதாயிற்று. அதுவும் எதிர்த்து போட்டியிட்டவரை ஸ்டாலின் வாபஸ் வாங்கச் சொன்னதாலே விஜயனுக்கு ஜெயமாம்!
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேர்தலில் ஸ்டாலின் ஆதரித்ததோ திருவிடைமருதூர் ராமலிங்கம். வென்றதோ டி.ஆர். பாலு ஆதரவாளர் கல்யாணசுந்தரம்.
தேனி மாவட்ட செயலாளராக தன்னுடைய ஆதரவாளர் கம்பம் ராமகிருஷ்ணனை கொண்டுவர ஸ்டாலின் முயற்சிக்க மீண்டும் மூக்கையாவே பதவியை கைப்பற்றிவிட்டார். ஸ்டாலினின் கட்டளையை ஏற்று மூக்கையா ஆதரவாளர்கள் 12 பேர் அணி மாறிய போதும் மூக்கையாவே வென்றது ஸ்டாலினை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
தருமபுரி மாவட்டத்தில் இன்பசேகரன் ஆதிக்கம் இருந்த போதும் சிலபல மேலிட உள்ளடி வேலைகளால் தடங்கம் பெ.சுப்ரமணி வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் முரட்டு பக்தர்
தூத்துக்குடியில் முரட்டு பக்தர் என். பெரியசாமியின் மகன் ஜெகன் அன்னபோஸ்ட்டாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது பொய்த்துப் போனது. இதற்கு காரணம் கருணாநிதியின் உறுதிமொழிப்பத்திரம்தானாம். எங்கே மகன் ஜெகன் நின்று தோற்றுவிட்டால் என்ன செய்வது என நினைத்து பேசாமல் தானே களத்துக்கு வந்து வென்றிருக்கிறார் என். பெரியசாமி.
கானாவை கவிழ்த்த ஆதரவாளர்கள்
திருநெல்வேலியில் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் கைப்பற்றினார். மேற்கு மாவட்டத்தில் தன் மகன் சங்கரை எப்படியும் செயலாளராக்கிவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் 'கா'னா கருப்பசாமி பாண்டியன். இதற்காக போட்டியில் இருந்த தமது ஆதரவாளர் அப்துல் வகாப்பிடம் பேசியும் பார்த்தார் 'கானா'. ஆனால் வகாப் விட்டுக் கொடுக்காமல் போக 'கானா' குடும்பத்தின் மா.செ. கனவு மண்ணாகிப் போனது.












Click it and Unblock the Notifications