ஸ்டாலின்- விஜயகாந்த் சந்திப்பு: திருமணத்தின் பெயரால் சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு "அச்சாரம்"?
சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்த போதும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சட்டசபை தேர்தலில் தி.மு.க.- தே.மு.தி.க. இடையேயான கூட்டணிக்கு அச்சாரமாகத்தான் இந்த சந்திப்பு எனக் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் தே,மு.தி.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைப்பதற்கு ஸ்டாலின் பகீரத முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் மு.க.அழகிரி, விஜயகாந்தை மிகக் கடுமையாக விமர்ச்சி குட்டையைக் குழப்பியதால் கூட்டணி அமையாமல் போனது.

தற்போது தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்கிற நிலைமை உள்ளது. அதுவும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகி உள்ள நிலையில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதனால் அண்ணா தி.மு.க. அசுர பலத்துடன் வெல்வதைத் தடுக்க ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுன் ஓரணியில் திரண்டாக வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இதற்காக தே.மு.க.தி, தி.மு.க. கட்சிகள் தங்களது வியூகங்களை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தின் பிரச்சனைகளுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்தார் விஜயகாந்த். அதே கையோடு தமிழக தலைவர்களை டெல்லிக்கும் அழைத்துச் சென்றார் விஜயாகாந்த்.
தற்போது தமது தம்பி மு.க.தமிழரசுவின் மகன் திருமணத்தை வைத்து விஜயகாந்த் பாணியில் ஸ்டாலினும் அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதில் விஜயகாந்தை தேமுதிக தலைமையகத்துக்கு நேரில் சென்று சந்தித்தார் ஸ்டாலின்.
இச்சந்திப்பின் மூலம் திருமணத்துக்கு மட்டுமல்லாமல் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவதற்கான 'பந்தக்கால் நடப்பட்டுவிட்டதாகவும்" கூறப்படுகிறது.
சந்திப்புகள்தானே தமிழக அரசியலை தீர்மானிக்கிறது!












Click it and Unblock the Notifications